Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆளுநர் மிஸ்டர் ரவி.. நான் கேட்கிறேன்”.. சீறிய ஸ்டாலின்! அமைதியை குலைக்க வந்துள்ளாரா? சரமாரி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "தமிழ்நாட்டில் நிலவும் அமைதியைக் குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எந்த நோக்கத்தோடு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்?" என திமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மே 7,8,9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் காஞ்சிபும் வடக்கு மாவட்டம், கண்டோன் மெண்ட் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

CM stalin answers to governor rn ravi allegations

ஆளுநருக்கு முதல்வர் பதில் : இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆங்கில நாளேட்டுக்கு ஆளுநர் அளித்துள்ள பேட்டியில் கழக அரசு மீது பல்வேறு அவதூறான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதே பேட்டியில், முதலமைச்சர் நல்ல மனிதர் என்றும், என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார் என்றும், நானும் அவரிடம் அன்பாக நடந்து கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் - நட்பு பாராட்டுவதுதான் தமிழர் பண்பாடு என்பதைத் தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கருணாநிதியும் எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்த அடிப்படையில் எந்தக் காலத்திலும் எந்த சூழலிலும் நான் அந்தப் பண்பில் இருந்து இம்மியளவும் விலகிச் செல்ல மாட்டேன். அதே நேரத்தில் நட்பையும் கொள்கையையும் குழப்பிக் கொள்ள மாட்டேன். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டு தந்துவிட மாட்டேன்.

CM stalin answers to governor rn ravi allegations

நட்பு வேறு கொள்கை வேறு : அதில் உறுதியாக இருப்பான் இந்த ஸ்டாலின். கடந்த ஜனவரி மாதம் 9ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உரையாற்ற வந்த ஆளுநர் ரவி, நாம் தயாரித்து வழங்கிய உரையை வாசிக்காமல் அதனை திருத்தி வாசித்தார். நாம் எழுதித் தந்ததை விட்டுவிட்டும் - அவராகச் சில செய்திகளைச் சேர்த்தும் வாசித்தார். அவருக்கு அவை நடவடிக்கைகள் பற்றித் தெரியவில்லை. அப்படி அவர் நடந்து கொண்டது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால் தான், நாம் தயாரித்து அனுப்பிய உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

அவையின் மாண்பைக் காப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. நாட்டுப் பண்ணுக்குக் கூட இருக்காமல் வெளிநடப்பு செய்தார் ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும் - மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் - நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் - நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இம்மாமன்றமும்- என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே சொன்னவன் நான்.

CM stalin answers to governor rn ravi allegations

பற்றி எரிகிறதா? : தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரையை ஏன் வாசிக்கவில்லை, திருத்தினேன் என்பதை பொதுவெளியில் மிக நீண்ட பேட்டியாகவும் ஆளுநர் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருக்கிறார். பாஜக ஆளுகிற மணிப்பூர் மாநிலம் இதோ பற்றி எரிகிறதே - அது போல தமிழ்நாடு பற்றி எரிகிறதா? என்ன பேசுகிறார் ஆளுநர்? சில நாட்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் நடந்ததே? அது பாஜக ஆளும் மாநிலம் அல்லவா? அதுபோல இங்கு நடந்ததா?

'பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பைத் தடை செய்ததைத் தொடர்ந்து வன்முறை நடந்ததாகச் சொல்கிறார். அதில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. அதில்,16 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். 6 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள்.

சர்வதேச போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு தமிழ்நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுநர் சொல்கிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகு அப்படி எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அப்படி ஒரு தகவல் வந்துள்ளது. அதற்கும் திமுக ஆட்சிக்கும் தொடர்பு இல்லை. எதற்காக பழைய சம்பவங்களைச் சொல்லி திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் ஆளுநர்.

CM stalin answers to governor rn ravi allegations

சனாதன காலத்தை உருவாக்க நினைக்கிறாரா? : 19.4.2022 அன்று தர்மபுரம் ஆதினத்துக்கு தான் போன போது தனது வாகனம் வழிமறித்து தாக்கப்பட்டதாக ஆளுநர் அபாண்டமாக பொய் சொல்கிறார். அவரது வாகனம் சென்ற பிறகு தான் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கையில் இருந்த கொடிகளை வீசியது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. ஆளுநரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்க்க முடியாத வகையில் போலீஸ் வாகனங்களுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டார்கள் என்பதும் வீடியோவில் உள்ளது. அப்படி இருக்கும் போது தனது வாகனம் வழிமறிக்கப்பட்டதாகச் சொல்வது பச்சைப் பொய் ஆகும். இப்படி கருப்புக் கொடி காட்டியவர்கள் திமுகவினர் அல்ல.

சிதம்பரத்தில் நடந்த குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்கை முன் வைத்து ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவருக்கு அப்போதே பதில் கடிதம் அனுப்பி வைத்துவிட்டோம். சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் வழக்கு பதியப்பட்டது. இதில் இவருக்கு என்ன வந்தது?

குழந்தைத் திருமணத்தை தடுப்பதில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறாரா? அந்தக் காலத்தில் 7 வயதில், 8 வயதில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்களே அத்தகைய சனாதன காலத்தை உருவாக்க நினைக்கிறாரா?

13 வயது சிறுமிக்கும் - 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது தவறு. அதனால் தான் 11பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் ஆளுநர்? குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரா? இதைக் கண்காணிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரா? அவர் சொன்னதில் வினோதமான புகார் என்னவென்றால்...

CM stalin answers to governor rn ravi allegations

என்ன பேசுகிறார் ஆளுநர்? : மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள் தான் வாங்குகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம்? குஜராத் மாநில நூலகத்தில் தமிழ் புத்தகங்களை வைப்பார்களா? நாகாலாந்து ஆளுநராக இருந்தாரே அங்கு உள்ள நூலகத்தில் எல்லாம் எல்லா மொழி புத்தகங்களையும் வைக்கச் சொல்லி சட்டம் போட்டாரா? என்ன பேசுகிறார் ஆளுநர்?

அட்சய பாத்திரா திட்டத்தை எதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறார். தமிழ்நாடு அரசே, காலைச் சிற்றுண்டித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பிறகு எதற்காக தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டும்? இவர் எதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஊதுகுழலாக மாறுகிறார்? அதற்கு என்ன அவசியம் வந்தது?

ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கையெடுத்துப் போடாமல் இழுத்தடித்தவர் இந்த ஆளுநர். யாரோ சிலரின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற சந்தேகம் தான் இதன் மூலமாக உறுதிப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்தப் பார்க்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பாதி அதிகாரங்கள் கவர்னர்களிடமும் கவர்னர் ஜெனரல்களிடமும் இருக்கும். பாதி அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடம் இருக்கும். அதனை மாற்றி முழுமையான மக்களாட்சியை உருவாக்கியது தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மையக் கரு என்பதே மக்களாட்சி தான். ஒன்றிய அரசை ஆளும் அதிகாரம் இந்தியாவின் தலைமை அமைச்சரான பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் இருக்கிறது. மாநிலத்தை ஆளும் அதிகாரம், மாநிலத்தின் முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் இருக்கிறது. சட்டத்தை இயற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் இருக்கிறது.

இதனை மாற்றி தனக்கு ஏதோ சர்வ அதிகாரங்களும் இருப்பதைப் போல ஆளுநர் அவர்கள் நினைத்துக் கொள்கிறார். ஏராளமான சட்டங்களையும், சட்டத் திருத்தச் சட்டங்களையும் நிறைவேற்றுகிறோம் என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றுவது இல்லை. அனைத்துமே அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டே நிறைவேற்றப்படுகின்றன.

அதில் ஆளுநருக்கு சந்தேகம் இருக்குமானால், மாநில அரசிடம் விளக்கம் கேட்கலாம். அதனைச் சொல்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அப்படி விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. மாறாக, பரிசீலனை செய்கிறேன் என்ற போர்வையில் அதனை ஊறுகாய் பானையில் போட்டு ஊற வைப்பதைப் போல ஆளுநர் மாளிகையில் முடக்க நினைத்தால் அதனைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு. இது எனது அதிகாரம் மட்டும் அல்ல, மக்களின் அதிகாரம். எனது உரிமை மட்டும் அல்ல, மக்களின் உரிமை ஆகும்.

அதனால் தான், இப்படி நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அவையில் இருந்த அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் இது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி -டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் - இதனை ஆதரித்து எனக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இது மிகச் சரியான தீர்மானம் என்பதை வழிமொழிந்திருக்கிறார்கள். இது ஏதோ தனிப்பட்ட ஸ்டாலினுக்கும், ஆர்.என்.ரவிக்குமான பிரச்சனை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பிரச்னை மட்டுமல்ல. இது இந்தியாவின் பிரச்சனை. இந்திய மக்களாட்சியின் பிரச்சனை ஆகும்.

கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து அதனால் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு நியமன ஆளுநர் நிறுத்தி வைப்பாரேயானால் அதை விட மக்களாட்சிக்கு அவமானம் இருக்க முடியுமா?

ஆளுநர் கையெழுத்துத் தேவை என்பதையே அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நீக்க வேண்டாமா?அதற்கான குரலைத்தான் எழுப்பி வருகிறோம். அதனையும் இந்த திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் காட்டும். ஆளுநர் மூலமாகவோ - வேறு எதன் மூலமாகவோ பயமுறுத்த நினைத்தால் அதற்கெல்லாம் பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். மிசாவை - தடாவை - பொடாவைப் பார்த்தது தமிழ்நாடு. எங்களுக்கென ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்தை எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் செய்து காட்டுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+