'தப்பு நடந்துவிட்டது' ஆறுதல் சொன்ன ஸ்டாலின்.. 2 கோரிக்கைகள் வைத்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பம்!
சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் லாக் அப் மரணம் அடைந்த நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமாரிடம், பெற்றோரை கவனித்து கொள்ள நிரந்தர வேலைக்கான கோரிக்கை வைத்த போது, செய்து கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். 28 வயதாகும் அஜித் குமாரை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இவர் மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் இல்லாத நிலையிலும், அஜித் குமாரை கடுமையாக அடித்து துன்புறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீதிபதிகள் கருத்து
தொடர்ந்து காவல்துறையினர் அடி தாங்க முடியாமல் அஜித் குமார் உயிரிழந்தார். இதன்பின் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டால், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்
இந்த வழக்கில் அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பார்த்த நீதிபதிகள், மாநிலமே தனது குடிமகனை கொன்றுவிட்டது என்று கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் பாதிக்கப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
அஜித் குமார் தாய்க்கு ஆறுதல்
அப்போது முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித் குமார் தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக அஜித் குமார் தாய் பேசுகையில், என் பையனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொலை செய்துவிட்டார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு 28 ஆண்டுகள் வளர்த்து பறிகொடுத்துவிட்டோம். இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலின், ரொம்ப வருத்தமா இருக்கு.. மன்னித்துவிடுங்கள்.. மனதை தேற்றிக் கொள்ளுங்க.. கவலையாக இருக்கு.. தப்பு நடந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.
முதல்வரிடம் கோரிக்கை வைத்த சகோதரர்
தொடர்ந்து அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார் பேசுகையில், நடந்தது நடந்துப்போச்சு.. தப்புதான்.. என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. வேற ஏதும் பண்ண வேண்டுமா என்று கேட்டார். அதற்கு, நிரந்தர வேலை வேண்டும் என்றேன்.. உடனடியாக அவர், அதற்கு என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ செய்கிறேன்.. வருத்தப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.
2 கோரிக்கை
இந்த விசாரணையின் போது, அஜித் குமாரின் சகோதரரான நவீன் குமாரையும் போலீசார் அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். இதனை நேற்று முன் தினமே நவீன் குமார் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதே குடும்பத்தினரின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. அதேபோல் அஜித் குமாரின் மரணத்திற்கு அரசு தரப்பில் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்பதும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை?
ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திர்ப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், டிஎஸ்பி சண்முக சுந்தரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications