அண்ணா கொள்ளுப்பேத்தி திருமண வரவேற்புக்கு சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.. கூட யார்னு பாருங்க!
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி திருமண வரவேற்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய முன்னோடியுமான பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் வழி பேத்தியும், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் ஐஎப்எஸ் அதிகாரியுமான மு.பிரித்திகா ராணி, ராஜஸ்தான் மாநிலத்தில் துணை ஆட்சியராக உள்ள ஐஏஎஸ் அதிகாரியான சித்தார்த் பழனிசாமி ஆகியோரது திருமணம் கடந்த 7 ஆம் தேதி மதுரையில் மிக எளிமையாக நடந்து முடிந்தது.

நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள் என மேடைக்கு மேடை முழங்கும் திமுகவினரோ, முதல்வர் ஸ்டாலினோ, திமுக அமைச்சர்களோ பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி திருமண விழாவில் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.
அதே சமயம் அதே நாளில் திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும், திருச்சி எம்.பி துரை வைகோவின் மகளுமான வானதி ரேணு - கோகுல கிருஷ்ணன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ப்ரித்திகா ராணி IFS - சித்தார்த் பழனிசாமி IAS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறது. இந்த நிகழ்ச்சியில் தனது மனைவி துர்கா ஸ்டாலினோடு பங்கேற்று மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பியும் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவர்களோடு, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, திமுக எம்.எல்.ஏக்கள், சி.வி.எம்.பி எழிலரசன், பரந்தாமன் ஆகியோரும் சென்று மணமக்களை வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications