பிரச்சாரத்திற்கு விதிமுறை வகுப்பதாக சொன்னாரே முதல்வர்! இந்த 10 பாயிண்ட்டா இருக்குமோ?
சென்னை: அரசியல் பிரச்சாரங்களுக்கு விதிமுறைகளை வகுக்க வேண்டியது அனைவரது கடமை என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில் என்ன மாதிரியான விதிகள் வகுக்கப்படும் என்பதை பார்க்கலாம்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது பொய்யான தகவல்களை தவெகவினர் பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதற்கு செந்தில் பாலாஜிக்கும் தொடர்பிருக்கிறது என ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு பெருந்துயரமாகும். தமிழகத்தில் தற்போது வரை நடைபெறாத துயரமாகும். இது இனி மேலும் நடைபெறக் கூடாது. இந்தச் சம்பவம் நடைபெற்ற போது மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை.
கனத்த மனநிலையிலும், துயரத்திலும் இருந்து வருகிறேன். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்டு அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னரும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.
உடனே, அன்று இரவே கரூருக்கு சென்றேன். இந்த சம்பவத்தில் குழந்தைகள் பெரியவர்கள் என 41 பேரை இழந்துள்ளோம். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் அறிவித்து உடனடியாக வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பொய் செய்திகளையும், வதந்திகளையும் பார்த்து வருகிறேன். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவர்களும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் நடத்தும் போது எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகளை வகுக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பரப்புரைகளுக்கு எப்படிப்பட்ட விதிகளை வகுக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் இதற்காக முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அதில் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது.
1. பரப்புரையை பெரிய மைதானத்தில் நடத்துவதாக இருந்தால் அனுமதி கொடுக்கப்படும்.
2. பரப்புரைகள், பேரணிகள், அரசியல் கூட்டங்களுக்கு வரும் அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
3. அரசியல் கட்சித் தலைவரின் பின்னாலும் முன்னாலும் அவரவர் புரோட்டோக்காலுக்கு ஏற்ப பாதுகாப்பு படையினருடன் செல்ல வேண்டும். தவெக விஜய் பின்னால் போனது போல் ரசிகர்கள் பின்தொடர கூடாது.
4. மக்கள், உயர்ந்த கட்டடம், மரக்கிளைகள், மின்கம்பம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் ஏறுவதை தடை செய்ய வேண்டும்.
5. கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். போலீஸ் அனுமதிக்காக குறைந்து எண்ணிக்கையை போட்டுவிட்டு பிறகு அதை உயர்த்திவிட கூடாது.
6. ஆள் சேர்க்கும் நோக்கில் மக்களை மூளைச் சலவை செய்து அழைத்து வரக் கூடாது.
7. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு சரியாக வந்துவிட வேண்டும். 8 மணி கூட்டத்திற்கு வீட்டிலிருந்தே 8 மணிக்கு புறப்பட கூடாது. குறைந்தபட்சம் 1 மணி நேரம் தாமதமாகலாம். 5 மணி நேரம், 6 மணி நேரம் தாமதம் என்றால் அந்த கூட்டத்தில் பேச அனுமதி ரத்து செய்யப்படும்.
8. பேசும் இடத்திற்கு சற்று தூரம் இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலேயே மக்களை அரசியல் தலைவர்கள் பார்த்து விட்டால், அந்த கூட்டம் அப்படியே பின்னாலேயே துரத்திக் கொண்டு வராது.
9. போலீஸார் அனுமதி கொடுக்கும் நேரத்தில்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
10. தமிழகத்தில் 234 தொகுதிகள் என்பதால் ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களை கவர் செய்துவிடலாம் என எண்ணி கூட்டத்தை சேர்க்க கூடாது.
மேற்கண்ட 10 பாயிண்ட்கள் ஆலோசனை கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்படும் என தெரிகிறது. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் கமென்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications