2026 சட்டசபை தேர்தலில் இந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய பாஜக தயாரா? ஸ்டாலின் சவால்
சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டபேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தி திணிப்பை மையப்படுத்த தயாரா என பாஜகவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் எழுதி வருகிறார். அதில் அவர் வெளியிட்டிருப்பதாவது: மரம் அமைதியை விரும்பலாம். ஆனால் காற்று ஒரு போதும் அடங்காது. மக்கள் பணிகளை நாங்கள் பாட்டுக்கு செய்து கொண்டிருந்த நிலையில் எங்களை இந்தத் தொடரை எழுத தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான்.
அவர் தனது பொறுப்பை மறந்து, ஒரு மாநிலத்தையே இந்தி திணிப்பை ஏற்கும்படி மிரட்டத் துணிந்தார். தற்போது அவரால் வெல்ல முடியாத ஒரு போராட்டத்தை மீண்டும் தொடங்கிய நிலையில் அதற்கான விளைவுகளை எதிர்கொள்கிறார்.
இதில் மிகப்பெரிய வேதனை என்னவெனில் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கும் தமிழ்நாடு ஏற்கெனவே அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இலக்குகளை அடைந்துவிட்டது. ஆனால் இந்த கொள்கை 2030-க்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. முனைவர் பட்டம் முடித்தவருக்கு எல்கேஜி மாணவர் விரிவுரை வழங்குவது போல், இந்த தேசிய மும்மொழி கொள்கை உள்ளது.
திராவிடம் டெல்லியில் இருந்து உத்தரவுகளை எப்போதுமே எடுத்துக் கொள்வதில்லை, அதற்கு பதிலாக நாடே பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சாரம், தமிழகத்தில் கேலிக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. தமிழகத்தில் 2026 இல் சட்டசபை தேர்தலில் இந்தி திணிப்பை மையப்படுத்தி பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட தயாரா என சவால் விடுக்கிறேன்.வரலாறு தெளிவாக இருக்கிறது. தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பவர்கள் அரசியலில் தோற்கடிக்கப்படுவார்கள் அல்லது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திமுகவுடன் இணக்கமாகிவிடுவார்கள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு பதிலாக இந்தி ஏகாதிபத்தியத்தை தமிழகம் பொறுத்துக் கொள்ளாது.
மத்திய அரசின் திட்டங்கள் முதல் விருதுகளுக்கான பெயர்கள் வரை இந்தியாவில் பெரும்பான்மையானோர் இந்தி பேசாதவர்கள் இருக்கும் போதிலும் அவர்கள் திணறும் அளவுக்கு இந்தி திணிப்பு உள்ளது.
மத்தியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வருவார்கள், வராமலும் போவார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி ஆதிக்கத்தை தகர்த்த படை திமுக என்பதை வரலாறு சொல்லும் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் முதல்வர் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என பிடிவாதமாக இல்லை, தெளிவாக இருக்கிறோம். மத்தியில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழகம் உறுதியாக எதிர்த்து நின்றது.
அப்போதெல்லாம் இந்தியை நுழையச் செய்யும் திட்டங்கள்தான் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழகத்தின் கல்விக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்படவில்லை. பாஜக அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கும் மாபாதகச் செயலை செய்துள்ளது.
இந்தி திவாஸ் கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜகவினரும் தெரிவிக்கிறார்கள்.
இதன் உள்நோக்கத்தைத் தமிழகம் உணர்ந்திருப்பதால்தான் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்று பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications