வாரிசு அரசியல்.. திமுகவை சமாளிக்க முடியாமல் இத்துப்போன குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.. ஸ்டாலின் பதிலடி
சென்னை: வாரிசு அரசியல் என்பது திமுகவை களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களால் வைக்கக் கூடிய இத்துப்போன குற்றச்சாட்டு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக விமர்சித்துள்ள ஸ்டாலின், இப்போது பாஜகவின் வாஷிங் மெஷினில் போட்டு அதிமுகவை வெளுத்துவிட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் திமுகவை வாரிசு அரசியல் செய்வதாக உதயநிதி ஸ்டாலினை குறி வைத்து விமர்சித்தனர். எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்களில் நம் திட்டங்களை பின்பற்றுவதுதான். சமூகத்தில் எந்த பிரிவினரும் தனித்துவிடக் கூடாது என்பதால் தான் திமுக பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் செய்கிறது. தேவைக்கேற்ப திமுக கொள்கைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளால் முடியாது என்று சொல்லப்பட்ட திட்டங்களை கூட நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சேர்ந்து மக்கள் பயனடைந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. விடியல் பேருந்து திட்டம் விளிம்புநிலை மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இல்லடி தேடி கல்வி, இதயம் காப்போம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயலக மாணவர்களுக்கான உதவித்தொகை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கம் மற்றும் திருச்சி பேருந்து நிலையம், பாலங்கள், தோழி விடுதி, கீழடி என்று ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளது. திமுக பற்றி ஏராளமான பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
அதில் வாரிசு அரசியலை தான் முதலில் சொல்கிறார்கள்.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் மக்கள் முன் நின்று வாக்கு வாங்கினால் மட்டுமே வெல்ல முடியும். திமுகவை களத்தில் சமாளிக்க முடியாதவர்களால் வைக்கக் கூடிய இத்துபோனக் குற்றச்சாட்டு. திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்களா?
பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் தான். உச்சநீதிமன்றம் வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தான் அதிமுக. கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்களை எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? திமுகவை இந்து விரோத கட்சி என்று கூறுவார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் 1,730 நாட்கள் ஆட்சியில் 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு நான் நேரடியாக பதில் அளித்துவிட்டேன். ஆனால் அவர்கள் நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications