கணேசமூர்த்தி மறைவு சொல்லொணாத் துயரம் தருகிறது.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: ஈரோடு எம்.பியும், மதிமுக முன்னோடியுமான கணேசமூர்த்தி மறைவுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் இன்று அதிகாலையில் காலமானார். கணேசமூர்த்தி மறைவுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 24-ம் தேதி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கணேசமூர்த்தி. அவர், பூச்சிக்கொல்லி மாத்திரையை தண்ணீரில் கலந்து குடித்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கணேசமூர்த்திக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
கணேசமூர்த்தி பற்றி: ஈரோடு மாவட்டம் சென்னிமலை குமாரவலசுவை பூர்வீகமாகக் கொண்ட கணேசமூர்த்தி, 1978ஆம் ஆண்டு திமுக மாணவரணி இணை அமைப்பாளர் பதவியில் தொடங்கி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1993-ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ தொடங்கியபோது, அவருடன் சென்ற 9 மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர்.
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியது தொடர்பான பொடா வழக்கில் வைகோவுடன் சேர்த்து கணேசமூர்த்தியும் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். 2016-ம் ஆண்டு முதல், மதிமுகவின் பொருளாளர் பதவி வகித்து வந்துள்ளார். மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ள கணேசமூர்த்தி, பழனி தொகுதியில் ஒரு முறையும், ஈரோடு தொகுதியில் இரு முறையும் எம்.பியாக தேர்வு பெற்றவர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலையில் மரணமடைந்துள்ளார் கணேசமூர்த்தி. கணேசமூர்த்தி மறைவுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் கணேசமூர்த்தி. ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர்.

பின்னர் அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தள கர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தை தருகிறது. கணேசமூர்த்தி பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications