ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு ஈடுசெய்ய இயலாத இழப்பு! நடிகர் வடிவேலுவுக்கு முதல்வர் ஆறுதல்!
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருப்பதோடு வடிவேலுவுக்கு ஆறுதலும் கூறியிருக்கிறார்.
சினிமா, அரசியலை கடந்து தனிப்பட்ட முறையில் நடிகர் வடிவேலுவுடன் நட்பு பாராட்டி வருபவர் முதல்வர் ஸ்டாலின்.

வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த போது முதல் ஆளாக அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி அவருக்கு தைரியம் ஊட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்காக நடிகர் வடிவேலு ஊர் ஊராக வாக்குக் கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றி வந்ததும் திரும்பிப் பார்க்கத் தக்கது.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவுக்கு முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் விவரம் வருமாறு;
''நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.''
''ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications