'உள்ளம் உவகையில் நிறைகிறது' CLAT தேர்வில் சாதித்த மலைவாழ் மாணவரை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: பொது சட்ட நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ள முதல் பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர் பரத் சட்டம் பயின்று அந்த அறிவொளியை இந்த சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு திமுக துணை நின்று வழிநடத்தும் என்று பதிவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத். இவர் CLAT எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பச்சமலைப் பகுதியில் CLAT தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற புதிய சாதனையையும் செய்திருக்கிறார்.

இதுகுறித்து மாணவரின் தந்தை செல்வக்குமார் பேசுகையில், அம்மா இல்லை.. 10 ஆண்டுகளுக்கு முன்பே அம்மா இறந்துவிட்டார். நமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் சட்டம் மட்டுமே முன்னாடி இருக்கிறது. அதனை படித்தால் மக்களுக்கு உதவியாக இருப்பான் என்று உழைத்து படித்த வைத்தேன். இவர் படிப்பு மக்களுக்கு பயன்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர் பரத் பேசுகையில், பச்சமலையில் யாருமே வக்கீலுக்கு படித்தவில்லை. நான்தான் முதல்முறையாக சட்டம் படிக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார். மாணவரின் இந்த பேட்டி வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை பகிர்ந்து ஸ்டாலின் மாணவர் பரத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், உள்ளம் உவகையில் நிறைகிறது.. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் திமுக சட்டத்துறையும், அதன் செயலாளர் என்.ஆர்.இளங்கோவும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி JEE Advanced 2025 தேர்தலில் வெற்றி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தகுதி பெற்றார். அவரது தந்தை கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் கனவை நனவாக்கி ராஜேஸ்வரி சாதித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ராஜேஸ்வரியின் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications