Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛காங்கிரசுக்கு இடி’.. ‛இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் ராகுல் இல்லையா? பெயரை கூற மறுத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை சொல்ல முதல்வர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 7 வது கட்ட தேர்தல் என்பது ஜுன் 1ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை ஜுன் 4ல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

CM Stalin did not say the name of Rahul Gandhi as the prime ministerial candidate of the India alliance

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும் தொகுதி பங்கீட்டில் சில மாநிலங்களில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கள் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கவில்லை. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்தே களமிறங்கி உள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜகவில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் ‛இந்தியா' கூட்டணியில் இன்னும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படவில்லை. பல கட்சிகள் இருப்பதால் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பம் உள்ளது. இதனால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே ‛இந்தியா' கூட்டணி தேர்தலை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க மறுத்துள்ளார்.

அதாவது தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் ஓய்வுக்கு நடுவே ‛இந்தியா டூடே' செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‛‛வரும் லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறீர்களா'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛‛உறுதியாக, மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக தான் தேர்தலில் நிற்கிறோம்'' என்றார்.

இதையடுத்து ‛‛ஒருவேளை நீங்கள் சொல்வது போல் ‛இந்தியா' கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடித்தால் யார் பிரதமராக வருவார்?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின், ‛‛அந்த நேரத்தில் சூழ்நிலை எப்படி உள்ளதோ அப்போது தான் முடிவு செய்ய உள்ளோம். தேர்தலுக்கு பிறகு தான் நாங்கள் பிரதமரை தேர்வு செய்ய உள்ளோம்'' என்றார்.

ஸ்டாலினின் இந்த கருத்து தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியமாக உள்ளது. ஏனென்றால் ‛இந்தியா' கூட்டணியில் பிரதமர் பதவி மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.

மேலும் தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவை. இதனால் எங்கே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ‛இந்தியா' கூட்டணி மொத்தமாக சிதைந்துவிடுமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி அடக்கி வாசித்து வருகிறது. இருப்பினும் ‛இந்தியா' கூட்டணியில் முக்கிய தலைவராக இருப்பவர்கள் யாராவது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்களா? என்ற ஏக்கம் உள்ளது.

ஏனெ்னறால் கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் அறிவித்தவர் ஸ்டாலின்தான். அப்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் 2018ல் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைத்து இருந்தார். ராகுல் காந்தி பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசினார்.

அப்போது, ‛‛நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம். மோடி அரசை வீழ்த்த வேண்டும். வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக'' என முதல் ஆளாக அறிவித்தார். இருப்பினும் அப்போதும் பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இல்லை.

ஆனால் இந்த முறை பாஜகவை எதிர்க்கும் பெரும்பாலான கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட ஸ்டாலின் ராகுல் காந்தியின் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. இது காங்கிரஸ் கட்சியினரை வருத்தமடைய செய்துள்ளது. இதற்கிடையே தான் வரும் 12ம் தேதி கோவையில் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தமிழகத்தில் 9 தொகுதி + புதுச்சேரி என 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+