"திராவிட மாடல்".. அனைவருக்கும் வளர்ச்சி.. ரகுராம்ராஜன், எஸ்தர் குழுவிடம் பேசிய முதல்வர்.. செம மீட்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று பொருளாதார ஆலோசனை நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். ரகுராம் ராஜன் உள்ளிட்ட வல்லுநர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜனும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொருளாதார சரிவு, கடனில் இருந்து மீட்டு புதிய வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
இந்த நிலையில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் இன்று இவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார். குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட சிறப்பான குழுவை உருவாக்கியதற்காக உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஒப்புக்கொண்டனர்
குழுவில் இணைய ஒப்புக்கொண்டதற்காக முதல்வர் ஸ்டாலின் குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலவரம் குறித்து ஆலோசனை செய்தனர். தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பட்ஜெட் குறித்தும், கடன் சுமை குறித்தும் பேசினார். கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து விளக்கம் அளித்தார்.

ஆலோசனை
இதையடுத்து ஒவ்வொரு உறுப்பினராக முதல்வருக்கு ஆலோசனை வழங்கினர். பொருளாதார திட்டங்கள் குறித்தும், வாக்குறுதிகளைநிறைவேற்றுவதற்கு நிதி திரட்டுவது குறித்தும்,வருவாயை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் ஆங்கிலத்தில் பேசி கலந்துரையாடினார்கள்.

விளக்கம்
முக்கியமாக மக்கள் கைகளில் பணம் புழுங்குவது குறித்தும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு வல்லுநர்கள் குழு ஆலோசனை வழங்கினார்கள். இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான வளர்ச்சியாக, எல்லோரையும் உள்ளடக்கிய இருக்க வேண்டும்.
|
திராவிட மாடல்
நாம் திராவிட மாடல் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எல்லோருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருப்பதே திராவிட மாடல். நாம் எல்லோரும் அதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உங்களின் ஆலோசனை இருக்க வேண்டும். சமூக நீதி, பெண் வளர்ச்சி, ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சியை ஆதாரமாக கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

நேரில் பேசலாம்
வரும் நாட்களில் நாம் நேரில் சந்தித்து பேசலாம். இப்போது கொரோனா காலம். இதனால் நாம் நேரில் சந்திக்க முடியவில்லை. கொரோனாவிற்கு முடிவு கட்டுவோம். பின்னர் ஒன்றாக சந்திப்போம். "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இது எமது அரசு என பெருமைப்படும் அளவிற்கு திட்டங்களை வகுத்து, மக்களிடம் கொண்டு செல்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications