நான் அதிகம் பேசமாட்டேன்! நேரடி பிரச்சாரம் செய்யாதது ஏன் தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவே நேரடி பிரச்சாரத்தை தாம் தவிர்த்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெறுவது உறுதி என்றும் மாவட்டம் தோறும் வெற்றிவிழாவில் பங்கேற்க வருகை தருவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக துணை அமைப்புச் செயலாளரான அன்பகம் கலை இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

அன்பகம் கலை
திமுக துணை அமைப்புச் செயலாளரும், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்படுபவருமான அன்பகம் கலையின் இல்ல மண விழா சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மணவிழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், சாதாரண எழுத்தராக பணியில் சேர்ந்து இன்று திமுகவின் துணை அமைப்புச் செயலாளர் பதவி வரை அன்பகம் கலை உயர்ந்த பின்னணியை விவரித்தார்.

45 ஆண்டுகாலம்
தாம் பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்போதுமே ஒரே மாதிரி இருந்தவர் அன்பகம் கலை என்றும் தாம் சொல்வது சரியா தவறா என்றெல்லாம் கூட பார்க்காமல் உடனடியாக அதை நிறைவேற்றக் கூடியவர் அன்பகம் கலை எனவும் புகழாரம் தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தாம் ஒரு ஊருக்கு செல்கிறேன் என்றால் அதற்கு ஒரு நாள் முன்பாகவே அந்த ஊருக்கு சென்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு திருத்தங்களை செய்யக்கூடியவர் அன்பகம் கலை என பெருமிதம் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதிகம் பேசமாட்டேன்
அன்பகம் கலை அதிகம் பேசாதவர் என்றும் தாமும் அதிகம் பேசமாட்டேன் எனவும் குறிப்பிட்டார். மக்களை சந்திக்க தமக்கு பயம் இருந்ததால் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி பிரச்சாரத்தை தவிர்த்ததாக சிலர் பேசுவதாகவும் ஆனால் உண்மையிலேயே கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாகவே தாம் நேரடி பிரச்சாரத்தை தவிர்த்ததாக தெரிவித்தார். நாளை மறுநாள் வெளியாகவுள்ள தேர்தல் முடிவு திமுகவுக்கு வெற்றியை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வெற்றிவிழா
தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக மாவட்டம் தோறும் வெற்றிவிழா நிகழ்ச்சியில் தாம் பங்கேற்க வருகை தருவேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக நேற்றிரவு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications