சிரித்த முகம்.. 17 நாட்களுக்கு பிறகு நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்!
குடியரசு தின விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை : சட்டப்பேரவையில் நிகழ்ந்த சர்ச்சை சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு குடியரசு தின விழாவில் ஸ்டாலினும், ஆர்.என்.ரவியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் சூழலில், இன்று குடியரசு தின விழாவில் ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சட்டப்பேரவை - ஆளுநர் சர்ச்சை
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்து ஆளுநரிடம் வழங்கிய அறிக்கையில் இருந்த சில வார்த்தைகளை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. அதேபோல, சில வார்த்தைகளை தானாகச் சேர்த்து வாசித்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சர்ச்சை
முன்னதாக, ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே பொருத்தமானது எனத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் காரணமாக சமீபத்தில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா விருந்தில் பங்கேற்காமல் முதல்வர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தவிர்த்தன.

தேநீர் விருந்து
இந்த சூழலில், குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி வாயிலாகவும் நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேருக்கு நேர்
இந்நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மரபுப்படி, முதலில் வந்த முதல்வர் ஸ்டாலின், அதன் பின்னர் வந்த ஆளுநர் ரவியை வரவேற்றார். சிரித்த முகத்துடன் கைலுக்கி வரவேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் வணக்கம் செலுத்தி, வரவேற்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ரவி.

ஒரே மேடையில் ஆளுநர் - முதல்வர்
தமிழ்நாடு அரசின் முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கு முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய ஆளுநர், மேடைக்குச் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், மேடையில் இருந்தபடி ஆளுநரும், முதலமைச்சரும் குடியரசு தின அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

17 நாட்களுக்குப் பிறகு
கடந்த ஜனவரி 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர். 17 நாட்களுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும், சிரித்த முகத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை வரவேற்றதும் கவனம் பெற்றுள்ளது. இதனால், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications