ஹை டென்சன்.. ஸ்டாலின் செல்லும் விமானத்தில் கோளாறு! கடைசி நேரத்தில் பிரச்சனை - நாளை பயணம்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால் இன்றைய அவரது பயண திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை அவர் டெல்லிக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் சில முறையே டெல்லிக்கு பயணம் சென்று இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்காக நேரில் சென்று பிரதமரிடம் துக்கம் விசாரிக்கக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.

அதற்கு முன்பாக அதே டிசம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் சென்றார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி 20 மாநாடு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசிய அவர், அன்றைய தினமே சென்னை திரும்பினார்.
டிசம்பர் மாத பயணங்களுக்கு முன்பாக 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி டெல்லிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
2023 ஆம் ஆண்டு தொடங்கி 4 மாதங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில் முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல திட்டமிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக இரவு விமான நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது அவர் டெல்லி செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்டாலினின் இன்றைய டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. நாளை காலை 6 மணியளவில் அவர் விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications