10 வயதில் பகுத்தறிவு மேடையேறி.. 80 ஆண்டுகளாக போர் முரசம்.. கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: தகைசால் தமிழர் விருது பெறும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். "பத்து வயதில் பகுத்தறிவு மேடையேறி எண்பது ஆண்டுகளாக இன எழுச்சிப் போர்முரசம் கொட்டி வரும் சுயமரியாதைச் சுடரொளி அவர்." என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. "தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். கி.வீரமணிக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வரும் 2023 ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்காக தேர்வாகியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன். பத்து வயதில் பகுத்தறிவு மேடையேறி எண்பது ஆண்டுகளாக இன எழுச்சிப் போர்முரசம் கொட்டி வரும் சுயமரியாதைச் சுடரொளி அவர்.
இனம் - மொழி - நாடு மூன்றும் மூச்சென எந்நாளும் ஓய்வறியாமல் உழைத்துவரும் அவருக்கு, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டில் இந்த விருது வழங்குவதைத் தமிழ்நாடு அரசு பெருமையாய்க் கருதுகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு அடையாளமாய் விளங்கும் மானமிகு ஆசிரியரின் தொண்டுத் தொய்வின்றி தொடரட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications