”முதல்வர் ஸ்டாலினால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” - மாற்றுத்திறனாளி மணி
செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளி மணியின் வாழ்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மணி, செங்கல்பட்டு அருகே உள்ள ஈச்சங்கரணை கிராமத்தில் வசித்துவருகிறார்.
இவருக்கு என்ன ஆனது? முதல்வர் என்ன உதவி செய்தார்?

"நான் கூலித்தொழில் தான் செய்து வந்தேன். அதிகம் படிக்கவில்லை. 5 ஆம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். ஆடுகளையும் வளர்த்தும் வருகிறேன். அதற்குத் தழைகள் வெட்டுவது, புல் வெட்டிக் கொண்டுவருவது என அனைத்து வேலைகளையும் நான் தான் பார்த்துவருகிறேன்.

அப்படி ஒருமுறை மரத்தில் தழை வெட்டும் போது தவறி கீழே விழுந்துவிட்டேன். அப்போது என் மகனுக்கு 5 வயது இருக்கும். சரியா சொன்னால், 1998இல் இந்த விபத்து நடந்தது.

எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். கால் உடைந்து முடங்கியதால், என்னால் கூலித் தொழிலுக்குப் போகமுடியவில்லை. பிள்ளைகளையும் அதிகம் படிக்கவைக்க முடியவில்லை" எனக் கண்களை ஈரமாக்கும் தன் கதைகளை கடகடவென்று கொட்ட ஆரம்பிக்கிறார் மணி.

அவரது மகள் யமுனா, "அப்பாவுக்குக் கால் இல்லாமல் போனதில் இருந்து பல கஷ்டங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். சரியான வருமானம் இல்லாமல் வேதனைப்பட்டு இருக்கிறோம். அம்மாதான் எங்களை வளர்த்துக் கரை சேர்த்தார்" என வார்த்தைகளைத் தேடித்தேடிப் பேசுகிறார். இவருக்குச் சரளமாகப் பேசவராது என்பது மற்றொரு சோகம்.

மணி தனக்கு நடந்த சம்பவத்தைப் பற்றிய நிகழ்வுகளை மீண்டும் அசைபோடத் தொடங்கினார். "நான் மரத்திலிருந்து விழுந்ததால் இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. அதன் பின்னால் என்னால் நடக்கமுடியவில்லை. அது மட்டுமல்ல; எனக்கு இடுப்புக்குக் கீழ் சுத்தமாக உணர்ச்சி இல்லாமல் போய்விட்டது.

ஆகவே என்னால் மலம், சிறுநீர் வருவதை உணரவே முடியாது. படுத்தப்படுகையாக ஒரு வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். அதன் பின் எந்தத் தொழிலுக்கும் போகவில்லை.

மனவேதனை தாங்காமல், ஒரு கட்டத்திற்குமேல் தற்கொலைக்கு முயன்றேன். அதன்பின்னர் தான் வீட்டில் இருப்பவர்கள் தைரியம் கொடுத்தார்கள். அன்று முதல்தான் கொஞ்சம் நம்பிக்கையோடு வாழ முடிவு செய்தேன்" என்கிறார்.
மனைவி செல்வி, "எனக்குச் சொந்த ஊர் கல்பாக்கம். கல்யாணத்திற்குப் பிறகு செங்கல்பட்டில் உள்ள குண்ணவாக்கம் அருகே உள்ள ஈச்சங்கரணைக்கு வந்துவிட்டேன். என் கணவர் கல்யாணம் ஆகி பலவருடங்கள் வரை நன்றாகத்தான் இருந்தார்.

ஒருநாள் மரம் ஏறி ஆட்டுக்குத் தழைகள் பறித்தார். அப்போதுதான் தவறி விழுந்தார். அதிலிருந்து நான் தான் அவரைக் காப்பாற்றி வருகிறேன். அவருக்கு விபத்து ஏற்படும் வரை அவர்தான் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
திடீரென்று விபத்து நடந்தவுடன் குடும்பமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. அதன் பின்னால், அவரையும் வைத்துக் கொண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல" என்கிறார்.
மணிக்குப் பழைய வாழ்க்கை போல் இப்போது இல்லை. அவர் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். காரணம் முதல்வர் ஸ்டாலின். பல ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த இவரை, ஊர் உலகம் சுற்றவைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

"முன்பு எல்லாம் சக்கர நாற்காலி வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தேன். எனது காலைக் கடனைக் கூட என்னால் தனியாகச் செய்யமுடியாது. யாராவது துக்கிக் கொண்டு போக வேண்டும். திரும்பக் கூட்டி வரவேண்டும். அப்படி இருக்கும் நான் வெளி உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் போக முடிவதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.
ஒருமுறை முதல்வர் அய்யா ஸ்டாலினுக்கு மனு போடச் சொன்னார்கள். நான் போட்டுத்தான் பார்ப்போமே என மனு போட்டேன். உடனே அதிகாரிகள் வந்து விசாரணை செய்தார்கள். என்னென்ன தேவை என விசாரித்தார்கள். மருத்துவரீதியாக என்ன செய்ய முடியும் எனப் பரிசோதித்தார்கள். அதன் பின்னால் இணைப்பு சக்கரம் போட்ட பேட்டரியில் இயங்கக்கூடிய சைக்கிளை வாங்கிக் கொடுத்தார்கள்.

இப்போது ஊர் எல்லையில் பெட்டிக்கடைப் போட்டிருக்கிறேன். இந்த வாகனத்தில்தான் இப்போது போய் வருகிறேன். வியாபாரம் செய்கிறேன். வீட்டுக்கு உதவியா இருக்கிறேன். முன்பைவிட தன்னம்பிக்கை அதிகமாகி இருக்கிறது.
இதற்கு முழுக் காரணம் நம்ம முதல்வர் அய்யா ஸ்டாலின் தான். அவரால் புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. அவருக்குக் காலம் முழுக்க கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. எனக்கு எதிர்காலத்தைக் காட்டியவர் அவர்" என்கிறார்.












Click it and Unblock the Notifications