இனி ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை! சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
சென்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் வாயிலாக பெறலாம்.
இதற்கான பிரத்யேக இணையதளம் புதிதாக உருவாகியிருப்பதால் அதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
மேலும், இதன் மூலம் இனி தொட்டதெற்கெல்லாம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துதுறை சார்பில், பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் வாயிலாக பெறும் வசதியை தொடங்கி வைத்தார்.

நேரில் செல்லாமல்
2021-22 ஆம் ஆண்டிற்கான உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே நேரடி தொடர்பு இல்லாத (Contactless Service) போக்குவரத்து சேவைகளான பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பரிவாகன்
அதன்படி, பழகுநர் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகியவற்றை பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன், விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.

புதிய சேவை
இதனிடையே முதல்வர் தொடங்கி வைத்துள்ள இந்த புதிய சேவையால், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கண்டவர்களுக்கும் மக்கள் இனி கப்பம் கட்ட வேண்டிய நிலை இருக்காது. பரிவாகன் இணையதள தொடக்க நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications