“இதை செய்வீங்கனு நம்புறேன்”: பெற்றோர், ஆசிரியர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் ஆசிரியர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேல்நிலைப் பள்ளிகள் 3156, உயர்நிலைப் பள்ளிகள் 3094, தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 24350, நடுநிலைப் பள்ளிகள் 6976 பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் 5000, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 3000 என மொத்தம் 37, 576 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு பிறகு மே மாதம் 1 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளிகள் இன்று திறப்பு: இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு முன்னதாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மை செய்தல், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் அனைத்து விலையில்லாப் பொருள்களும் வழங்க தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று பள்ளிகள் திறந்ததும், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ மாணவியருக்கும் மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், புதிய மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளும் இன்று நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வேண்டுகோள்: இந்நிலையில், பள்ளி திரும்பிய மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இந்தக் கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பதிவு: மேலும், இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கோடைக்கால விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியில் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணி கல்வி தான். அதை உணர்ந்து மாணவர்கள் நன்கு கற்று சாதனை படைக்க வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசு பள்ளிகளில் அனைத்து ஆசிரியர் காலியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications