அரசு பேருந்துகளில் பெண்களின் இலவச பயணத்தை இனி ஓசினு சொல்ல முடியாது.. புதிய பெயரை அறிவித்த ஸ்டாலின்
சென்னை: அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்திற்கு விடியல் பயணம் என சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 3ஆவது முறையாக முதல்வர் கொடியேற்றியுள்ளார்.

முன்னதாக காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த நிலையில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயரிட்டார்.
சங்கரலிங்கனார் ஒருவர் தான் செத்து போயிருக்கிறார் என நீங்கள் கருதினால் தமிழ்நாடு என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் 5 உயிர்களை தர தயாராக இருக்கிறோம் என கூறியவர் கருணாநிதி. சென்னை மாகாணத்தில் பிற மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் தனியே பிரிந்தவுடன் தமிழ் பேசும் நாம் மட்டும் ஏன் தனி மாநிலமாக பிரிய கூடாது என கேட்டவர் தந்தை பெரியார்.
பார் போற்றும் இந்த சுதந்திர தினவிழாவில் முதல்வராக நான் 3ஆவது ஆண்டு கொடியேற்றி வைத்துள்ளேன். 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுவதில் நான் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு வணக்கம். கலைஞர் நூற்றாண்டு விழாவில் தேசியக் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்ததால் பெருமையடைகிறேன்.
முதல்வர்களும் கொடியேற்ற வேண்டும் என மாநில சுயாட்சியை காத்தவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழை, தமிழ்நாட்டை கொண்டாடுவதாகும். விடுதலை வீரர்களை போற்றி பாராட்டுவதில் திமுக யாருக்கும் சளைத்தது அல்ல என்பதை நினைவூட்ட சில உதாரணங்களை நான் இங்கு சொல்கிறேன்.
மாவீரன் பூலித்தேவனுக்கு நினைவு மண்டபம், கட்டபொம்மனுக்கு கோட்டை, சுந்தரலிங்கனாரின் வாரிசுகளுக்கு வீடு, காமராஜருக்கு மணிமண்டபம், ராஜாஜிக்கு நினைவு மண்டபம், வள்ளியாடிக்கு மணிமண்டபம், வஉசி செக்கு நினைவு சின்னமாக அறிவித்தல், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குஇலவச பேருந்து பயணம், தியாகிகளுக்கு மணிமண்டபம், ஈஸ்வரனுக்கு அரங்கம் , விஸ்வநாத தாஸ் வாழ்ந்த வீடு புதுப்பித்தல், கக்கனுக்கு சிலை, சிப்பாய்க் கலக நினைவுத்தூண், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
1962 ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுகு அச்சுறுத்தல் வந்த போது பிரதமர் நேருவுக்கு துணை நின்றவர் அறிஞர் அண்ணா. 1971 பாகிஸ்தானால் இந்தியாவுக்கு பிரச்சினை வந்த போது இந்திய மாநிலங்கள் சார்பில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் ரூ 25 கோடி நிதி திரட்டி வழங்கப்பட்டது. அதில் 6 கோடி நிதி தமிழகத்தில் இருந்து முதல்வராக இருந்த கருணாநிதி திரட்டி தந்ததாகும்.
1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் 3 தவணைகளாக மொத்தம் ரூ 50 கோடி தந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
திராவிட மாடல் எப்போதும் தியாகிகளை மதித்து போற்றி வருகிறது. இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கமாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு விரிவுப்படுத்தப்படும். இதன் மூலம் 31008 பள்ளிகளில் 15,75,000 மாணவர்கள் பயனடைவர். அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கும் திட்டத்திற்கு விடியல் பயணம் என்ற பெயரிடப்படுகிறது.இதுவரை இலவச பேருந்துகளில் 314 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
விடுதலை போராட்ட தியாகிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஓய்வூதுயம் ரூ 11,000 ஆக உயர்த்தப்படுகிறது. நடப்பாண்டில் 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவிகளுக்கு ரூ 350 கோடி வழங்கப்படவுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் ககாலிப்பியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்குவதற்காக மேலும் 500 பெண்களுக்கு 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்த 2 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு கோடி பெண்கள் பயன்பெறும் கலைஞர் உதவித் தொகை திட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றினால்தான் நீட் போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும். வேற்றுமை விதைக்கும் சக்திகளை வேரோடு அழிப்போம், ஒற்றுமையால கிடைத்த சுதந்திரத்தை அதே ஒற்றுமையால் காப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications