2 வாரத்தில் 4 தலைவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு.. 3 கூட்டணி கட்சிக்கு திமுக கொடுத்த சைலண்ட் வார்னிங்!
சென்னை: கடந்த 2 வாரங்களில் முதல்வர் ஸ்டாலின் நான்கு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்துள்ளதன் மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாகத் தொகுதிப் பங்கீட்டில் அதிக சீட்களை எதிர்பார்த்திருக்கும் விசிக, சிபியும், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுகவின் வார்னிங் இது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் சீட்களை எதிர்பார்ப்பதாக நேரடியாகக் கூறிவிட்டன. அதேபோல் சொந்த சின்னத்தில் நிற்போம் என்பதையும் கூறி வருகின்றனர்.

மதிமுக ஒருபடி மேலே சென்று 12 தொகுதிகளைக் கேட்போம் என்று கூறி வந்தது. இதனால் திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக அதிமுக மற்றும் பாஜக விமர்சித்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் பிடிவாதம் காட்ட மாட்டோம் என்றும் திருமாவளவன் கூறினார். தொகுதிப் பங்கீடு சூழலுக்கு ஏற்பவே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 4 முக்கிய தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நேரம் ஒதுக்கி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த சந்திப்பின் மூலமாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு மறைமுக வார்னிங்கை கொடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, தொகுதிப் பங்கீட்டில் அதிக சீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது என்பதே இந்த எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அப்படி எதிர்பார்த்தாலும், நீங்கள் மட்டுமே தங்களின் கூட்டணியில் இல்லை. உங்களின் இடத்தை நிரப்ப மாற்றுக் கட்சிகளும் தயாராக இருப்பதாக திமுக தரப்பில் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மறுபக்கமே நேற்று வைகோ, மீண்டும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பேசியதாகும்.
அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் உள்ளது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்குள் வரும் பட்சத்தில், அவர்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட் எதிர்பார்ப்புடன் பேச்சுவார்த்தைக்கு வரக் கூடாது என்பதற்காக திமுக இப்போதிலிருந்து அவர்களைத் தயார் செய்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications