தீரன் சின்னமலை.. நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை! நினைவு நாளில் ஸ்டாலின் மரியாதை!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் பிறந்தவர். தீர்த்தகிரி எனும் இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், உள்ளிட்ட பல பயிற்சிகளைக் கற்று மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு வென்றவர்.

தீரன் சின்னமலையைப் போரில் வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி கடந்த 1805ஆம் ஆண்டு சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் தீரன் சின்னமலையின் உருவச் சிலை அமைக்கப்பட்டது.
தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications