கோபமே பட மாட்டார்.. வெளிநடப்பு செய்யும் போது கூட சிரிச்சிக்கிட்டே போவார்! நயினாரை பாராட்டிய ஸ்டாலின்
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோபமே படமாட்டார் என்றும், வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்துக்கொண்டே செல்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி பாகுபாடு இன்றி பழகக்கூடியவர், யாரும் கோபம் வராத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவர் நயினார் நாகேந்திரன் என அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
தமிழக பாஜக மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நயினார் நாகேந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பாஜக தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அதே போல, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக மாநிலத் தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
கோபமே பட மாட்டார்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நயினார் நாகேந்திரனை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தும் வாழ்த்து கூறியிருந்தார். அவை நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு, முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நயினார் நாகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் நாகேந்திரன். கட்சி பாகுபாடு இன்றி பழகக்கூடிய நயினார் நாகேந்திரன் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. யாரும் கோபம் வராத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவர் நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரனுக்கு எனது சார்பாகவும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்துக்கொண்டே செல்வார் என்று முக. ஸ்டாலின் கூறும் போது, அவையில் லேசான சிரிப்பலை எழுந்தது.
அமைச்சராக இருந்தார்
தமிழக பாஜக தலைவராக கடந்த ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன், அதிமுக ஆட்சி காலத்தில் 2001ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2001-2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
2016 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உள்கட்சி குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, 2017ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார். இதையடுத்து, 2021 சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.












Click it and Unblock the Notifications