அரசுத் துறை செயலாளர்களை உட்கார வைத்து "கிளாஸ் எடுத்த" முதல்வர் ஸ்டாலின்! மணிக்கணக்கில் பாடம்!
சென்னை: கடந்த 2 நாட்களாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அரசின் அனைத்துறை செயலாளர்களையும் பட்டை தீட்டிய வைரம் போல், புதிய உத்வேகத்துடன் செயலாற்றும் வகையில் அவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அரசின் அறிவிப்புகள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்குப் போய் சென்று சேர்கிறதா என்பதை அறிந்து அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என துறைச் செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர்.
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் கடந்த 2 நாட்களாக அரசின் துறைச் செயலாளர்களை அழைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் வேகமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர்.
இரண்டாம் நாள் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரைவின் விவரம் வருமாறு;

அரசின் அறிவிப்புகள்
சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை நீங்கள் இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளும் நீங்கள் வெளியிட வேண்டும். இதில் நீங்கள் நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும். அதுமட்டும் போதாது; ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் மூலம் அது கடைக்கோடி மக்களுக்குப் போய் சென்றடைந்திருக்கிறதா? அவற்றிற்குச் செயலாக்க வடிவமும் தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

துறைத் தலைவர்கள்
துறைத் தலைவர்களை வழி நடத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஈடுபடுத்தி இதனை நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும். அதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தொழில் துறையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.அது விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வந்து, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை நாம் பெருக்க வேண்டும்.

கனவுத் திட்டம்
எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.
புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அதை நீக்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும். குறிப்பாக, நில எடுப்பு மற்றும் அனுமதிகள் வழங்கல் போன்றவற்றைத் துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தொடர்புடைய பிற துறைகள் ஒத்துழைப்பு தந்திடவேண்டும்.

சுகாதாரத்துறை
மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் கோவிட் பெருந்தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது துறையின் அடிப்படையான மருத்துவ சேவைகளை மேம்படுத்தி வழங்கி, ஐ.எம்.ஆர்., மற்றும் எம்.எம்.ஆர். போன்ற குறியீடுகளை அனைத்து மாவட்டங்களிலும் கண்காணித்து, மருத்துவமனை நிர்வாகத்தினை மக்கள் மேலும் விரும்பும் வகையில், People friendly-ஆக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஊரக வளர்ச்சி
அதேபோல், கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஊரக வளர்ச்சித் துறையானது குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதித் திட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

டார்கெட் என்ன?
இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும், தனக்கான Target Population யார் என்பதை தெளிவாக உணர்ந்து, அவர்களுக்கு திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.இந்தத் தருணத்தில், நேற்று நான் குறிப்பிட்டதை மீண்டும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது, தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும்.

புதிய யுக்திகள்
புதிய யுக்திகளை, அவை எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு துறைத் தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து, தனது துறையில் செம்மையாகச் செயல்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டுமென்று அன்போடு கேட்டு, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.












Click it and Unblock the Notifications