Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்டுகொள்ளாத இந்தியா; கொண்டாடும் கலிஃபோர்னியா!- ’இல்லம் தேடிக் கல்வி’ பற்றி ஒரு ஸ்வீட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியபோது, சிலர் எதிர்மறையான கருத்தை முன்வைத்தனர்.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களைப் பொய்யாக்கி உலகத்துக்கே வழிகாட்டியான திட்டமாக பேசப்படுகிறது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இத்திட்டம் கற்றல் இடைவெளியில் இருந்த தடைகளைத் தவிடுபொடியாகத் தகர்த்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்திய அளவில் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

 இல்லம் தேடிக் கல்வி என்றால் என்ன?

இல்லம் தேடிக் கல்வி என்றால் என்ன?

நாட்டையே உலுக்கிய கொரோனா தொற்று பரவலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தான். வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியதால், அவர்களின் படிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால், வகுப்புப் பாடத்தை முறையாகப் படிக்காமலே தேர்ச்சி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 'அடித்தளம் சரியாக இருந்தால்தான் கட்டுமானம் நீடித்து நிற்கும்' என்பது பொறியியல் துறை சார்ந்த கணக்கு மட்டுமல்ல; எதிர்கால சந்ததிகளுக்கும் இந்தக் கருத்து பொருந்தும். கற்றல் இடைவெளியைச் சீர்படுத்துவதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் 'இல்லம் தேடிக் கல்வி'.

 தனித்தன்மை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

தனித்தன்மை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்


இல்லம் தேடிக் கல்வித் திட்டம், கடந்த ஒரு வருடமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சரியாகச் சொன்னால், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் அந்தந்த பகுதியிலுள்ள தன்னார்வலர்களை வைத்து பள்ளி நேரம் முடிந்த பிறகு மாலை நேரங்களில் 2 மணிநேரம் வரை கற்றல் இடைவெளியை நிரப்பும் நோக்கத்தில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஏறக்குறைய 2 லட்சம் தன்னார்வலர்கள், 35 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். முதலில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக ஆயிரம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டன.

இத்திட்டத்தின் செயல்பாட்டால் குழந்தைகளின் கற்றல் இடைவெளி குறைந்துவருவதை அறிந்த தமிழ்நாடு அரசு 2022-23 நிதியாண்டில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது.

இத்திட்டத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள வகுப்பறைகள் வளம் பெற்றுள்ளன. அதில் ஒன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உப்பட்டி கிராமப் பள்ளி. குறிப்பாக இதை ஏன் சொல்கிறோம் என்றால், இங்கு அதிகளவில் பழங்குடி குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இங்கு இல்லம் தேடிக் கல்விக்குழு அளித்த அறிவியல் அறிவை வைத்து நவீன் என்ற மாணவர் மிக்சி, மரம் வெட்டும் இயந்திரம் உட்பட சில பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார். மேலும், ஆடல், பாடல் மூலமாகக் குழந்தைகளுக்குப் பாடங்கள் கற்றுத் தரப்படுவதால் சோர்வின்றி அவர்கள் ஈடுபாட்டுடன் படித்து வருகிறார்.

அடுத்ததாக, கும்பகோணம் மாவட்டம் கொரநாட்டு கிராமப் பள்ளி. இந்த இரண்டு பள்ளிகளும் இன்று இத்திட்டத்தால் தனித்துவம் பெற்று விளங்குகின்றன.

நீலகிரியில் பணி செய்யும் தன்னார்வலர் லலிதா நம்மிடம் பேசுகையில், "கொரோனா தொற்று வந்ததால் கற்றல் இடைவெளி அதிகமாகிவிட்டது. 'இல்லம் தேடிக் கல்வி' வந்ததால் அவர்கள் இழந்த பாடங்களை எல்லாம் திரும்பப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது 'விட்டதைப் பிடிப்பது' என்று சொல்வார்களே அதைத்தான் இந்தத் திட்டம் கொடுத்திருக்கிறது.

பழங்குடி மாணவர்களுக்கு நான் முன்பே பாடம் நடத்தி இருக்கிறேன். அவர்களின் தாய்மொழி வேறு என்பதால் தமிழை உச்சரிப்பதில் சில மாறுபாடுகள் தெரியும். ஆகவே, அவர்களுக்கு முதலில் இருந்தே அ..ஆ.. கற்றுத் தந்தேன். ஆடல், பாடல் மூலம் பாடங்களை எளிமையாக்கினேன்.

அதேபோல், ஆங்கிலத்தைச் செயல்வடிவில் கற்றுத் தருகிறார்கள். முன்னால் நிற்பவரை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்? இடையில் நிற்பவரை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்? பின்னால் நிற்பவரை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்? என மொழியை அனுபவரீதியாகக் கற்றுத் தருவதன் மூலம் அந்தச் சொல் வாழ்வில் மறக்க முடியாத அனுபவக் கல்வியாகப் பதிந்துவிடும். இதுவே இல்லம் தேடிக் கல்வி ஏற்படுத்தியுள்ள மாற்றம்" என்கிறார்.

 பள்ளிக்கூடத்தைத் தாண்டி சிறப்பான கல்வி

பள்ளிக்கூடத்தைத் தாண்டி சிறப்பான கல்வி

உப்பட்டி கிராமப் பள்ளி தலைமையாசிரியர் சுந்தரலிங்கம் பேசும்போது, "முன்பெல்லாம் பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். 'எப்படா சாயந்தரம் வரும்' என்றும் காத்திருப்பார்கள். ஆனால், இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்பது விளையாட்டுகளுடன் கல்வியைக் கற்றுத் தருவதால் பிள்ளைகள் சோர்ந்துபோவதில்லை.

அதே உற்சாகத்துடன் பள்ளிநேரம் முடிந்த பிறகும் பாடத்தைப் பயிலத் தயாராக இருக்கிறார்கள். இந்த மாற்றம் உண்மையில் ஓர் அதிசயமான மாற்றம்" என்கிறார்.

தேயிலைத் தொழிலாளியாக பணிபுரியும் தேன்மொழி பேசுகையில், ''ஊரடங்கின்போது மாணவர்கள் வீட்டில்தான் இருந்தார்கள். படிக்கச் சொன்னால் படிக்கவே மாட்டார்கள். புத்தகம் என்றால் அவர்களுக்கு வேம்பாகக் கசந்தது. ஆனால், இல்லம் தேடிக் கல்வி வந்த பிறகு வீட்டுக்கு ஒரு ஆசிரியர் வருகிறார். கண்காணிக்க ஒருவர் இருக்கிறார் என்பதால் மாணவர்களின் படிப்பு கெடாமல் உள்ளது" என்கிறார்.

இப்போது நாம் முன்பே குறிப்பிட்ட கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்கு வருவோம். இந்த ஆய்வின் முடிவுகள், 'Covid-19 Learning Loss and Recovery: Panel Data Evidence from India' என்ற தலைப்பில் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய காலம், கொரோனா தொற்று ஏற்பட்ட காலம், அதற்குப் பிந்தைய காலம் என மூன்று படிநிலைகளில் ஆய்வு நடைபெற்றன. கிட்டத்தட்ட 94 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வுக்கான கருத்துகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட 'இல்லம் தேடிக் கல்வி' மூலம் கடந்த 6 மாதங்களில் பன்மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு, 'இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைச் சரி செய்ய முடியும்' என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

 தடைபட்ட சாதிப் பாகுபாடு

தடைபட்ட சாதிப் பாகுபாடு

இந்த ஆய்வின் மூலம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ள இத்திட்டம் உலகளவில் ஒரு முன்னோடித் திட்டமாக மாறி இருக்கிறது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நேரடி பார்வையில் இத்திட்டம் கவனிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு சான்று சொல்லலாம்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தன்னார்வலர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாகத் தொலைபேசி மூலம் உரையாடினார். இரண்டு நாள் பயணமாக நீலகிரி சென்ற அவர் அப்போது இதனைச் செய்தார். அதேபோல் குன்னூரில் உள்ள ஒரு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்து, குன்னூர் தன்னார்வலர் சக்தி பிரியா கூறும் தகவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. அவர் நம்மிடம் பேசும்போது, "எங்க அம்மா அறிவொளி இயக்கத்தில் இருந்தார். அவரைப் போலவே நானும் பலருக்கும் கல்வி அறிவை போதிக்க வேண்டும் என விரும்பினேன். இப்போது, இல்லம் தேடிக் கல்வி மூலம் தன்னார்வலராக கல்வி போதிக்கிறேன். எனக்கு நானே ஒரு ஆசிரியை ஆனதைப்போல மிகுந்த உற்சாகமாக உள்ளது.

பாடம் நடத்தும்போது எனது அனுபவத்தில் ஒரு விஷயம் நடந்தது. என்னிடம் படிக்கவந்த மாணவர்களில் சிலர் திடீரென்று வரவில்லை. சில மாணவர்கள் மட்டும் வந்தனர். அவர்களை உற்று நோக்கியபோது அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர். பாடம் படிக்க வராதவர்கள் அனைவரும் வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, அந்தப் பிள்ளைகளின் வீட்டுக்கே சென்றேன். அவர்களிடம், பேசினேன். அந்தக் குழந்தைகள் படிக்க வருவதற்கு ஆர்வமாக இருந்தனர். ஆனால், பெற்றோர் தடைபோடுகிறார்கள் என்பதை உணர்ந்து பேசினேன். நான் பேசியதையடுத்து அவர்களும் வகுப்புக்கு வர ஒப்புக் கொண்டனர். இதனால் சமூக ஒற்றுமையை உருவாக்க முடிந்தது. அந்தவகையில், இது மிகச் சிறந்த திட்டம்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+