National Herald Case: விசாரணை முகமைகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது - ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்காகவும், அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காகவும் மத்திய முகமைகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த சட்ட அடிப்படையின்றி அவதூறு செய்வதற்கு மட்டுமே வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் பழிவாங்கும் அணுகுமுறை புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மைக்கு களங்கம் விளைவிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நேஷனல் ஹெரால்ட் வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய பாஜக அரசு மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி வருவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி உள்ளது. எந்தச் சட்ட ஆதாரமும் இல்லாமல், அரசியல் போட்டியாளர்களை தொந்தரவு செய்து, அவர்களின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இவ்வாறான வழக்குகள் தொடரப்படுகின்றன.
உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், எனது சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் எந்தவிதமான அச்சமின்றி செயல்படுகின்றனர். அதேநேரத்தில், செக்யூலரிசம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை உறுதியாக காப்பாற்றும் காந்தி குடும்பத்தை தொடர்ந்து விரட்டும் நோக்கில் பாஜக உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
பகைமையால் தூண்டப்படும் இதுபோன்ற அணுகுமுறை, நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்புகளின் மீதான நம்பகத் தன்மையை மீண்டும் மீண்டும் களங்கப்படுத்தி, அவற்றை அரசியல் அச்சுறுத்தலுக்கான கருவிகளாக மட்டுமே மாற்றி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications