சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோனு பதறும் காலம் மாறிவிட்டது- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!

தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்! என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்தனை மழை பெய்தும் சாலைகளில் வேகமாக தண்ணீர் வடிந்ததாக சென்னை மாநகராட்சி பதிவு செய்துள்ளதை சுட்டிக் காட்டி முதல்வர் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது. காலை 9 முதல் 10 மணி வரை ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே வேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. அடையாறில் 3.7 செ.மீ. மழையும் புழலில் 2.9 செ.மீ.மழையும், பெருங்குடியில் 2.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மழை நீர் வடிகால் சீரமைப்பு மற்றும் வெள்ள தயார் பணிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். இவரது உத்தரவினால் செய்யப்பட்ட பணிகளின் வாயிலாக சுரங்கங்களில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர், வேளச்சேரியில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதை அப்புறப்படுத்தும் பணிகள் ஜரூராக நடந்தது.

நாள்தோறும் சென்னை மாநகராட்சியால் செய்யப்படும் மழை நீர் வடிகால் பணிகள், மழை நீரை அகற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்பார்வையிட்டு வருகிறார், கடந்த இரு ஆண்டுகளாக 876 கி.மீ. நீளம் உள்ள மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளன. மக்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சென்னை மாநகராட்சி தொடர்ந்து பணியாற்றி வருகிறது என அந்த போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications