என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை! சிறையிலிருந்து பரீட்சை எழுத வந்தேன் -ஸ்டாலின்
சென்னை: மாநிலக் கல்லூரியில் படித்த போது சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு பரீட்சை எழுத வந்து சென்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் ஆர்வம் காரணமாக தன்னால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது கல்லூரிக்கால நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் வருமாறு;
செங்கல்லை காரில் எடுத்து வைத்த போது கூட இருந்தவர்களே குழம்பிப் போனார்கள் -உதயநிதி ஸ்டாலின் கடிதம்!
சிறிய இறுமாப்பு
''நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக எத்தனையோ நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்கிறபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவேனோ அதைவிட பல மடங்கு மகிழ்ச்சியை நான் படித்த கல்லூரியான இந்த மாநிலக் கல்லூரியில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியின்போது அதிகமான மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சிறிது இறுமாப்புடன் நின்று கொண்டிருக்கிறேன்.''
காலேஜ் சீனியர்
''தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய சீனியர் - என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.''
படிப்பில் ஆர்வமில்லை
''1972-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ஆம் நாள், இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவனாகச் நான் சேர்ந்து படித்தேன். முழுமையாக என்னைக் கல்வியில் ஈடுபடுத்திக் கொண்டேனா என்றால் இல்லை. ஏனென்றால், அப்போதே எனக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் அதிகமான ஆர்வம் கொண்டவனாக, நான் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டேன். 1971-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றிக்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராகச் சென்று நான் நடத்தினேன். அந்தக் காரணத்தால், என்னால் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.''
Recommended Video
சிறையிலிருந்து வந்து
''படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாத நான், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட நேரத்தில், நான் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு காலம் இருந்தேன். நினைத்து பார்க்கிறேன். அந்த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்தக் கல்லூரிக்கு வந்து நான் பரிட்சை எழுதிவிட்டுச் சென்றேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.''