விஷயம் கேள்விப்பட்டதுமே முதல்வர் அழைத்து கண்டித்தார்.. நங்கநல்லூர் சம்பவம் பற்றி சேகர்பாபு விளக்கம்!
சென்னை : சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் என்னை அழைத்து கண்டித்தார் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின் போது அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

தீர்த்தவாரியின்போது சாமி சிலை மற்றும் அர்ச்சனை பொருட்களுடன் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி எழுவது வழக்கம். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் மூழ்க, அவரை காப்பாற்ற அடுத்தடுத்து சென்ற 5 பேர் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில் 5 பேரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
தீர்த்தவாரி நிகழ்வின்போது பலியான 5 பேருக்கும் சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் 2 மணித்துளிகள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். கடந்த 4 ஆண்டுகளாக அங்கு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரி குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு அனுமதியின்றி குடமுழுக்கு செய்ய முயன்றனர். தீர்த்தவாரி நடைபெறும் நிகழ்வு பற்றி அறநிலையத் துறைக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன், குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதலமைச்சர் என்னை அழைத்து கண்டித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பலியான 5 பேரின் குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications