அப்படியா சொல்றீங்க.. அதுக்கு பேசாமல் ஸ்டாலினை "இப்படி" கூப்பிடலாமே.. அர்ஜூன் சம்பத்தின் புது நக்கல்
ஸ்டாலினை தாக்கி இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அறிக்கை விடுத்துள்ளார்
சென்னை: எதுக்கு ஸ்டாலினை முதல்வர் என்று அழைக்க வேண்டும்.. இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என்று கூப்பிடுங்கள்.. 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும்" என்று அர்ஜுன் சம்பத் அறிக்கை விட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மத்தியில் ஆளும் அரசை
"ஒன்றிய அரசு" என்று அழைக்க தொடங்கியது.
அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை இப்படியேதான் சொல்லி வருகிறார்கள்.. அதன்படியே அரசின் அறிவிப்புகளிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பாஜக
இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.. பாஜகவின் நயினார் நாகேந்திரன் இது தொடர்பான கேள்வியை எழுப்ப, அதற்கு முதல்வர் ஸ்டாலினும் நீண்ட நெடிய விளக்கம் தந்திருந்தார்.. ஆனாலும் அந்த வார்த்தையை பயன்படுத்த தொடர்ந்து பாஜக தரப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

யோசனை
இப்போது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தும் அறிக்கை விட்டு எதிர்ப்பு காட்டி உள்ளார்.. அத்துடன் ஸ்டாலினை முதல்வர் என்று கூப்பிட வேண்டாம் என்றும் ஒரு யோசனை சொல்லி உள்ளார்.. அர்ஜுன் சம்பத்தை பொறுத்தவரை, எப்போதுமே திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்.. கிராம சபை கூட்டங்கள் முதல் எப்போதுமே ஸ்டாலினை தொடர்ந்து விமர்சனமும் செய்து வருபவர்..

சீண்டல்
ஒருமுறை திமுகவையே காலி செய்வோம் என்றுகூட அர்ஜுன் சம்பத் பேசியிருந்தார்.. இப்போது மீண்டும் திமுகவை சீண்டி அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்: "சமீப காலமாக, மத்தியிலுள்ள பாஜக அரசை, "மத்திய அரசு" என்று குறிப்பிடுவதை தவிர்த்து, "ஒன்றிய அரசு" என்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்... டிவி செய்தி வாசிப்பின்போதும் சில சேனல்கள் தவிர, மற்றவை 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிடுகின்றன.

ஆலோசனை குழு
அதே போல், ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல.. அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு - 163 சொல்கிறது. அதனால், இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விவாதங்கள்
அர்ஜூன் சம்பத்தின் இந்த அறிக்கையானது விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அர்ஜுன் சம்பத் சரியாகவே சொல்கிறார், சபாஷ் சரியான போட்டி என்கிறது ஒரு தரப்பு.. மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு 'மாவட்டங்கள் ஒன்றியம்'... மாநில சுயாட்சி என்றால் மாவட்ட சுயாட்சி கோரிக்கை எழ வாய்ப்புள்ளது.. இப்போதைக்கு நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, திமுக எதுக்கு இதை பிடித்து தொங்கி கொண்டிருக்க வேண்டும் என்கிறது மற்றொரு தரப்பு.












Click it and Unblock the Notifications