சாதி மதம் வேறுபாடுகளை தூக்கி எறிய வேண்டும்! சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்! ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: சாதி மதம் வேறுபாடுகளை தூக்கி எறிந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாதி, மதங்களைத் தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

எல்லோருக்கும் எல்லாம்
"எல்லோருக்கும் எல்லாம்" என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூகநீதி. அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும், வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்ற எண்ணம்தான் சமூகநீதி. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் அத்தகைய சமூகநீதியை நாம் வழங்கிட முடியும்.

சாதிக் கொடுமை
சாதிக் கொடுமையை, சான்றோர்களே தவறு என்று உணர்ந்து கொள்ளச் செய்து, தன் ஓங்கி உலகளந்த கல்வியால், சட்டமும், பொருளாதாரமும் கற்றுத் தேர்ந்தவர் மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அத்தகைய மாமேதை பிறந்த இந்த மண்ணில், சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை இன்னும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.

மதம் உன்னை மிருகமாக்கும்
நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியில், ஒற்றுமையில் அவ்வப்போது தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன. சமூகத்தில் உள்ள இன்னும் சில பகுதிகளில் காணப்படும் சாதி மத வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்து, 'மதம் உன்னை மிருகமாக்கும் - சாதி உன்னை சாக்கடையாக்கும்' என்ற பகுத்தறிவுச் சுடர் தந்தை பெரியாரின் வார்த்தைகளை மனதிலே கொண்டு, (மேசையைத் தட்டும் ஒலி) நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும்.

மனிதநேயம்
ஆனால், சாதி, மதங்களைத் தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவிலே கொள்ளவேண்டும். இவர்களையெல்லாம் தாண்டி, சாதி, இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, நாம் அனைவரும் சமஉரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் விளங்கிடவேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை இரும்புக் கரம் கொண்டு எடுக்கப்படும் என்பதையும் இந்த தருணத்தில் இங்கே கவன ஈர்ப்பு அறிவிப்பு கொடுத்த அத்தனை பேருக்கும் தெரிவித்து, இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்கின்றேன்.












Click it and Unblock the Notifications