ஆளுநருக்கு அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.. தேசபக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை.. ஸ்டாலின்!
சென்னை: என்னை சீண்டிப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என்னை ஒன்றும் செய்யாது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தேசபக்தி குறித்து பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை என்று கூறிய ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு பதில் அளிக்க வேண்டிய நான், அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. சட்டசபை மரபுப்படி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கம் போல் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று காரணத்தை கூறி, சட்டசபையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறினார். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இதேபோல் கேரளா, கர்நாடகாவிலும் ஆளுநர்கள் உரையை வாசிக்காமல் வெளியேறினர். இந்த நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு பதிலுரை அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினின் பதிலுரையை அதிமுக புறக்கணித்து அவையில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான், இன்று ஆளுநருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சோதனைகள் ஒன்றும் எனக்கு புதிது கிடையாது. சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான்.. அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் சோதனைகள் என்னை எதுவும் செய்யாது.
ஆளுநர் தான் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறார். தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காத ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்கள் நாங்கள். ஆளுநருக்கு அழுத்தம் திருத்தமாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
என்னை சீண்டி பார்ப்பவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.. ஆனால் என்னை எதுவும் செய்ய முடியாது. ஆளுநர் கேள்வி கேட்க வேண்டும் என்றால் மத்திய அரசைத் தான் கேட்க வேண்டும். ஒரே காரணத்தை திரும்ப திரும்ப சொல்லி உரையை வாசிக்காமல் தவிர்த்து வருகிறார். தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிறது.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொள்கிறேன். அவர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படியில்லை. முரண்பாடுகள் இருந்தாலும், இதயத்தை ரணமாக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications