சரியான டைமிங்.. பொன்முடி அமைச்சராக பதவியேற்றதும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!
சென்னை: உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனால் அமைச்சர் பதவியையும் இழந்தார். இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தீர்ப்பையும், தண்டனையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார் பொன்முடி.

இதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், ஆளுநர் ரவி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். பொன்முடிக்கு அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு. உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு காட்டமாக நேற்று தெரிவித்தது. இதையடுத்து இன்று பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தமிழக ஆளுநர் ரவி.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியாக 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் ஆனார் பொன்முடி.. மறுபடியும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!
கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயகச் சிதைவையும், கூட்டாட்சியின் மறைவையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டுக்கு முன் கூர்முனைகளை இடும் தவறான சாகசங்களையும், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டதையும் இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தல் மக்களாட்சியைக் காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் மிக முக்கியமானது. நமது புகழ்மிகு நாட்டை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார அத்துமீறலைத் தடுக்கக் கடுமையாகப் பாடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications