அவர் இதை பார்த்துட்டு இருப்பாருன்னு நினைக்கிறேன்.. பாஜக எம்எல்ஏவிற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்! ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திடீரென பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு நன்றி தெரிவித்தது அவையில் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாடு சட்டசபையில் உங்கள் தொகுதியின் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் அந்த திட்டத்தின் பயன்கள் குறித்தும், திட்டத்திற்காக அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் தெரிவித்தார். அதில், இந்த திட்டம் கடந்த 7-5-2022ம் தேதி 110 விதியின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை அறிவித்தேன். அதன்படி எல்லா தொகுதியிலும் இருக்கும் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கும் கோரிக்கைகளை எழுதி பட்டியலிட்டு மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தேன்.
அதை ஏற்று எம்எல்ஏக்கள் வரிசையாக கோரிக்கைகளை அனுப்பினார்கள். இதுவரை 233 சட்டசபை உறுப்பினர்கள் இந்த கோரிக்கை கடிதங்களை அனுப்பினார்கள். நன்றாக கவனியுங்கள், ஒன்றே ஒன்றுதான் வரவில்லை, என்று கூறினார்.

மனம் திறந்து பாராட்டினார்
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திடீரென பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு நன்றி தெரிவித்தது அவையில் கவனத்தை ஈர்த்தது. உங்கள் தொகுதியின் முதல்வன் திட்டத்திற்கு பாஜக எம்எல்ஏ, பாஜக எம்எல்ஏ குழு தலைவர் நயினார் நாகேந்திரன் என்னிடம் நன்றி கூறினார். அவர் இந்த திட்டத்தை மனம் திறந்து பாராட்டினார். அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த நன்றிகள். அவர் இப்போது சட்டசபையில் இல்லை.

மனம் நிறைந்த நன்றி
அவர் இப்போது அவையில் இல்லை. அவருக்கு நன்றி. அவர் இதை டிவியில் பார்த்துக்கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன், என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்தின் கீழ் 1483 பணிகளுக்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கடிதங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. துறை வாரியாக மதிப்பீடு செய்து, அவரை உயர் கமிட்டியில் வைத்து விவாதம் செய்து, அந்த பணிகளை இந்த ஆண்டிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக
உங்கள் தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்க முடியாத திட்டங்கள், முடங்கிக் கிடக்கும் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எல்லா எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை கொடுத்தார். இந்த கடிதத்திற்கு வந்த பதில்கள் பற்றித்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக எழுதிய கடிதத்தில், சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

பாஜக எம்எல்ஏ நயினார்
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஏற்கனவே நேற்று முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்தின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இன்று திட்டத்தை ஆதரித்து சட்டசபையில் பேசிய நயினார் நாகேந்திரன், ராமரை நாங்கள் தெய்வமாகி வழிபடுகிறோம். அப்படி இருக்கும் போது ராமாயணம் கற்பனை என்றெல்லாம் நீங்கள் சொல்ல கூடாது. ராமர் பாலம் கட்டினாரா என்று தெரியாது.. இது தெய்வ நம்பிக்கை தொடர்பானது. இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். சேது சமுத்திர திட்டம் வந்தால் உண்மையில் நான்தான் மகிழ்ச்சி அடைவேன். நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவன். தென் மண்டலம் இதனால் வேகமாக வளர்ச்சி அடையும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications