2 நாட்கள் பயணமாக கோவை, திருப்பூர் வரும் ஸ்டாலின்.. வெளியாகப் போகும் புதிய அறிவிப்புகள்?
சென்னை: ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவையில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின், பின்னர் கள ஆய்வில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே வேலூர், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதேபோல் மக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோவிலும் ஈடுபட்டார்.

இதனிடையே ஜூலை 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூலை 21ஆம் தேதி திடீரென ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு வாரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வில் இருந்த ஸ்டாலின், சுமார் 10 நாட்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்தார். இதன்பின் ஒவ்வொரு நாளும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கோவை, திருப்பூர் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கள ஆய்வுக்காக செல்லும் ஸ்டாலின், 2 மாவட்டங்களிலும் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் ஸ்டாலின், வேலம்பாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்க உள்ளார். பின்னர் மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து ஆகஸ்ட் 12ல் பொள்ளாச்சி செல்லும் முதல்வர் ஸ்டாலின், விவசாய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகக் கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தைத் திறந்து வைக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2 நாட்களில் கோவை மற்றும் திருப்பூரில் ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 மாவட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications