மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு.. திட்டங்களை இந்த ஆண்டே செயல்படுத்த முடிவு!
சென்னை: பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் படி கல்விக்கொள்கை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில், பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சொந்த மாநில கல்விக் கொள்கையை (SEP) முறையாக வரைவு செய்து வெளியிட்டுள்ள ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக, தமிழகத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த 2022-ல் தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர்.
மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1 ஆம் தேதி தமிழக முதல்வரிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.
மாநில கல்விக் கொள்கை அறிக்கையானது உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளிக் கல்விக்கான அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு இருக்கிறார். இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி படிப்பு முதல் தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என மாநிலக் கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது என்றும் மாநிலக் கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, சொந்த மாநில கல்விக் கொள்கையை (SEP) முறையாக வரைவு செய்து செயல்படுத்த முடிவு செய்துள்ள ஒரே இந்திய மாநிலம் தற்போதைய நிலையில் தமிழ்நாடு மட்டுமே. கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் நிபுணர் குழுக்களை அமைத்துள்ளன. மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்குவோம் என அறிவித்துள்ளன. ஆனால், இன்றைய நிலவரப்படி வேறு எந்த மாநிலமும் அதிகாரப்பூர்வமாக முழுமையான மாநில கல்விக் கொள்கையை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications