"ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது".. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை!
சென்னை: ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம், நடுத்தர குடும்பங்களின் கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் கட்டண உயர்வைக் கைவிடக் கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் மேற்கொள்வதற்கான பொதுப் போக்குவரத்து சேவையாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகள் தங்கள் பயணத்தை மிகவும் வசதியாக மேற்கொள்ள உதவுவதும் ரயில் பயணம் தான். இந்நிலையில், தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா வீதமும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள், மாதாந்திர பாஸ் மூலம் பயணிப்பவர்களைப் பொறுத்தவரை, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு கட்டணமும் உயர்த்தப்படமாட்டாது. சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணத்தைப் பொறுத்தவரை முதல் 500 கி.மீ தொலைவுக்கு கட்டண உயர்வு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் கட்டண உயர்வு முடிவைக் கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று வேலூர் காட்பாடிக்கு சென்னையில் இருந்து ரயிலில் பயணித்த முதல்வர் ஸ்டாலின், ரயில் கட்டண உயர்வு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை, மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது... AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல. அது ஒரு குடும்பம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications