“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்”.. டெல்லிக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் ஸ்டாலின்!
சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (பிப்ரவரி 22) மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று (பிப்ரவரி 23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும், 8 வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற எனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications