Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய UGC வரைவு விதியை வாபஸ் வாங்குங்க.. தீர்மான நகலோடு டெல்லிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் யுஜிசி வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 9.1.2025 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலினை இணைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று (20-1-2025) கடிதம் எழுதியுள்ளார்.

mk stalin ugc vice chancellor

அந்தக் கடிதத்தில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுவதாகவும், வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்பதைத் தாம் குறிப்பிட விரும்புவதாகவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) - நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

1. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல் :

பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால் வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கெனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆதலால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றதும், சுமையாகவும் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நுழைவுத் தேர்வுகள் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவதுடன் நிதிச்சுமையையும் ஏற்படுத்தி சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும், இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER 47%) ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது எனவே, நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது என்பதுடன், இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

* மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் தனி நுழைவுத் தேர்வைவிட பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

2. நான்கு வருட (கலை/அறிவியல்) பட்டம் பெற்றவர்கள் M.Tech./M.E. பட்டப்படிப்பில் சேர்க்கை பெறத் தகுதி :

நான்கு ஆண்டு கலை/அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை M.Tech., அல்லது M.E., படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டிற்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்.

3. பல நுழைவு மற்றும் பல வெளியேறும் அமைப்பு :

Multiple Entrance Multiple Exit (MEME) என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக:

* கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு: தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை MEME சீர்குலைக்கிறது.

* செயல்படுத்தலில் உள்ள சவால்கள்: பாடத்திட்டத்தில் அவ்வப்போது புதுப்பிப்புகள் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நுழையும் மாணவர்களுக்கு கடினமாக்கும்.

* இடைநிற்றலை இயல்பாக்குதல்: MEME முறை இடைநிற்றலை சட்டப்பூர்வமாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கும்.

* கல்வி அமைப்பில் நிலையற்ற தன்மை: MEME மாதிரி கல்வி திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டை சிக்கலாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கக்கூடும்.

4. வரைவு யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) நெறிமுறைகள்-2025ஐப் பொருத்தவரை, பின்வருபவை ஏற்புடையதாக இல்லை:

i. கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தல் (பிரிவு 10.1)

துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முன்மொழியப்பட்ட அளவுகோல்கள், தொழில்துறை, பொது நிர்வாகம் அல்லது பொதுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியது மிகுந்த கவலைகளை எழுப்புகிறது. கல்வித்துறைக்கு வெளியே தலைமைப் பதவிகளில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பினும், துணைவேந்தர் பதவிக்கு ஆழ்ந்த கல்வி நிபுணத்துவம் மற்றும் உயர் கல்வி முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவுகோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம். கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ii. துணைவேந்தர் தேடல் குழுவில் மாநில அரசை நீக்குதல் (பிரிவு 10.1.iv)

மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.

iii. மாறுபட்ட பாடப்பிரிவு ஆசிரியர்கள் (Cross Disciplinary Teachers) (பிரிவு 3.2 மற்றும் 3.3).

இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் பி.எச்.டி பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் NET/SET தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன. சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களுக்கு, குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.

வரைவு விதிமுறைகளில் இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தமது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, வரைவு நெறிமுறைகள் திரும்பப்பெறப்பட்டு, மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உட்பட மேற்கண்ட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியும் 09.01.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அத்தீர்மானத்தின் நகல் ஒன்றினையும் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் கனிவான பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+