தென்காசியில் ஸ்டாலின்.. ரூ.1,020 கோடியில் நலத் திட்டங்கள்.. இன்று மதுரையில் தங்கும் முதல்வர்
சென்னை: தென்காசி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தென்காசிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 25 ஆம் தேதி செல்வதாக இருந்தது. ஆனால் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று (29 ஆம் தேதி) முதல்வர் ஸ்டாலின் தென்காசி செல்கிறார். இன்று அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி செல்கிறார். வழியில் 11.30 மணிக்கு ஆலங்குளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மதியம் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் தங்கி விட்டு மாலை 4 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இலத்தூரில் இருந்து தென்காசி ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரம் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 24 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதுதவிர ரூ.575 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். ஒட்டுமொத்தமாக தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலைச் சுற்றிலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்துக்கு சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக ராஜபாளையம் வழியாக மதுரை சென்று இரவு அங்கு தங்குகிறார். இன்று தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று இன்று இரவு அங்கேயே தங்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
நாளை அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து மதுரையில் இருந்து மீண்டும் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் ஆலையத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications