ஒரே நேரத்தில் 12 துறைகள்! அலசி ஆராய்ந்து ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் ஒரே நேரத்தில் 12 துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்த சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து துறைச் செயலாளர்களிடம் விலாவாரியாக கேட்டு அறிந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் விவரம் வருமாறு;

12 துறைகள்
உயர்கல்வித் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, பொதுத்துறை, சட்டத்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, முதல்வரின் முகவரி, நிதித்துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

10 கல்லூரிகள்
இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறையின் சார்பில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது, அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புதல், மாணவ, மாணவியர் விடுதிகள் கட்டுதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

சமூகநலன்
மேலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் குறைபாட்டை போக்கிட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை கண்டறிந்து, பயிற்சி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை தாமதமின்றி வழங்கிட உத்தரவிட்டார்.

இளைஞர் நலன்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்போட்டியினை சிறப்பாக நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

முதல்வர் உத்தரவு
பொதுத்துறை சார்பில் இலங்கைத் தமிழர் முகாம்களில் கட்டப்படும் புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளை குறித்த நேரத்தில் முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும், முதல்வரின் முகவரித் துறையின் சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் பொதுமக்களின் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications