எப்போதும் என் அன்புக்குரிய தங்கை தமிழிசை! பிறந்தநாள் வாழ்த்தில் பாசமழை பொழிந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்தில் தமிழிசையை 'எப்போதும் என் அன்புக்குரிய தங்கை' எனக் குறிப்பிட்டு பாசமழை பொழிந்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில் இந்த வாழ்த்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது திமுகவை அவர் விமர்சிக்காத நாட்கள் இல்லை. அந்தளவு தினமும் விமர்சிப்பார், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அரசியல் மேடைகளில் தாக்கி பேசுவார். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு கண்ணியத்தை பார்க்கலாம், வார்த்தைகளில் கவனத்தை பார்க்கலாம். அந்தளவு மிகுந்த எச்சரிக்கையுடன் பொதுவெளிகளில் பேசக்கூடியவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அன்புக்குரிய தங்கை
இதனால் தான் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கூட தமிழிசை சவுந்தரராஜன் மீது திமுக எப்போதுமே ஒரு மென்மையான போக்கை கடை பிடித்து வந்தது. எல்.முருகன், அண்ணாமலை போன்றவர்களுக்கு எதிராக திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இன்று பேசுவதை போல் அன்று தமிழிசைக்கு எதிராக பெரியளவில் யாரும் பேசியதில்லை. காரணம் விமர்சனத்திலும் கூட கண்னியமான வார்த்தைகள், சொற்றொடர்களை பயன்படுத்தக் கூடியவர் தமிழிசை.

வாழ்த்து மழை
இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் தமிழிசையை, 'எப்போதும் என் அன்புக்குரிய தங்கை' என பாசத்துடன் குறிப்பிட்டு வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வரும் ஜூலை மாதம் நடைபெறக் கூடிய குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசையை வேட்பாளராக பாஜக முன்னிறுத்தக் கூடும் என தகவல் கசியும் நிலையில் இந்த வாழ்த்து முக்கியமானதாக கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் ஸ்டாலினை போலவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலரும் தமிழிசையுடன் ஏற்கனவே தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications