12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்பட 12 அப்பாவி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (ஜூலை 3) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழக முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 15 ஆம் தேதி அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்கு பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
Recommended Video
அத்துடன் மாநிலத்தின் கடலோரபப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.