முதல்வரை அழைத்த ஆளுநர்.. அடுத்து என்ன? சட்டப் பிரிவு 355! ஆளுநருக்குப் பெரிய செக்?
சென்னை: பல நாள்களாக எதிர்பார்த்து வந்த ஆளுநர் மற்றும் முதல்வர் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.
இந்தச் சந்திப்பு சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகச் சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறி இருக்கிறார். அதையே அமைச்சர் ராஜ கண்ணப்பனும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதிகாரப்பூர்வமான ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்திலும் அதே சுமுக நிலை இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஆக, அத்தனை மசோதாக்களுக்கும் கூடிய விரைவில் விடுதலை கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி நடக்குமா? இல்லை மோதல் தொடருமா?
திமுக வழக்கறிஞர் சரவணன் என்ன சொல்கிறார்? சுமுகமா இந்தச் சந்திப்பு?
"உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லி இருக்கிறது முதல்வரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று. இதில் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், முதல்வரைப் போய் ஆளுநரைச் சந்தியுங்கள் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. ஆளுநரைத்தான் அழைத்துப் பேசச் சொல்லி இருக்கிறது.
சுமுகமாகப் பிரச்சினையை முடியுங்கள் என்று ஆளுநரைத்தான் அறிவுறுத்தி இருக்கிறது.அதிலிருந்தே பிரச்சினை எங்கே இருக்கிறது என நீதிமன்றம் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டது.

இதில் சமரசம் எனச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது சொந்த பிரச்சினை கிடையாது. ஆளுநர் சமரசத்திற்கு வந்துவிட்டார். பிரச்சினைகள் இல்லாமல் தீர்வு வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதற்கு. உச்சநீதிமன்றம் பஞ்சாப் வழக்கில் மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. ஒரு ஆளுநரின் அதிகாரம் என்பது என்ன? என்பதை அந்தத் தீர்ப்பு தெளிவாக முன்பே விளக்கி இருக்கிறது.
ஆகவே, இதில் எந்தக் குழப்பமும் இல்லை. இங்கே ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒன்றிய அரசு அண்ணாமலையை வைத்து அரசியல் செய்தால் செல்லுபடியாகாது என்பதற்காக மறைமுகமாக ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறது. ஒன்றிய அரசு சொல்வதை ஆளுநர் ரவி செய்து வருகிறார்.
எனவே தமிழ்நாடு ஆளுநருக்கு என்று தனியாகச் சட்டம் எல்லாம் போடத்தேவையில்லை. முன்பே அதற்கான தீர்ப்புகள் வெளியாகிவிட்டன. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்குமான வழக்கில் கூட ஆளுநரை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் படிதான் நடந்துகொள்கிறேன் என்று சொன்னால், அவர் தனக்கு மறுமுறையாக வந்த மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பு வைத்திருக்கவே கூடாது. அதுதானே சட்டத்தில் உள்ளது.
சட்டம் அவருக்கு 3 அதிகாரங்களைத்தான் வழங்கி உள்ளது. ஒன்று, அவர் கையெழுத்துப் போடவேண்டும். இரண்டு, காரணங்களைக் கூறி திரும்ப அனுப்பி வைக்க வேண்டும். மூன்று, இந்த இரண்டு வழிகளையும் பயன்படுத்தாவிட்டால் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பி வைக்கவேண்டும்.
ஒருமுறை மசோதாவின் மீதான பரிந்துரைகளைக் கூறி சட்டமன்றத்திற்கு அவர் திருப்பி அனுப்பிவைத்துவிட்டார் என்றால், அதை மீண்டும் நிறைவேற்றி சட்டமன்றம் அவருக்கே திரும்ப 2வது முறை அனுப்பிவைத்தால் அவர் மறுக்காமல் கையெழுத்துப் போட்டே ஆகவேண்டும்.
இதுதான் விதி. இதுதான் அவரது அதிகார வரம்பு. அதை மீறி அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று அவர் சொன்னால், அவர் யாரை ஏமாற்றச் செய்யும் வேலை இது?" என்கிறார் திமுக வழக்கறிஞர்

"அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்துகொள்ளவில்லை என்பதற்காகத்தான் இந்த வழக்கே தொடரப்பட்டது. சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை எப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கே இடம் இருக்கிறது. இவருக்கு ஒப்புதல் அளிக்க விரும்பவில்லை என்றால், அவர் நேரடியாக முதல் முறையிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இரண்டாவது முறையாக மசோதாவைப் புள்ளி, கமாவை மாற்றாமல் நிறைவேற்றி அனுப்பிய பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அப்படித்தானே சட்டப் பிரிவு 200 சொல்லி இருக்கிறது. அதை மறுதளித்துவிட்டு, குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பிவைக்கிறார்.

ஆக, தமிழக அரசைச் செயல்படவிடாமல் முடக்கப் பார்க்கிறார்கள். அப்படிச் செய்யும் சக்தி யார்? அதற்குக் காரணமாக ஆளுநர் உள்ளார். அதற்கான அவர் அழுத்தத்தை உருவாக்கி வருகிறார்.
அப்படி நிலை மோசமாகும் போது தமிழ்நாடு அரசு பிரிவு 355இன் படி, மாநில அரசைச் செயல்படவிடாமல் தடுக்கும் சக்தியை விலக்கும்படி வழக்கு தொடரலாம். அந்தச் சக்தி ஆளுநராக உள்ள பட்சத்தில் அவரை நீக்கச் சொல்லி நீதிமன்றத்தில் முறையிடலாம்.

ஆளுநர் இந்தச் சந்திப்புக்குப் பிறகு கையெழுத்துப் போடவில்லை என்றால், தமிழ்நாடு அரசு ஆளுநரை நீக்கச் சொல்லி முறையிடும் கட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே, அதற்கான பரிசீலனையைத் தமிழ்நாடு அரசும் சட்டமன்றமும் செய்ய வேண்டும்" என்கிறார் " பொன்ராஜ்
"ஆளுநர் ரவி செயல்பாடு குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு சின்ன சமாதானத்தைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தரப்பில் எந்த நியாயமும் இருப்பதாக நீதிமன்றம் நினைக்கவில்லை.

இதைப்போலவே டெல்லி துணைநிலை ஆளுநர் அம்மாநிலம் இயற்றும் மசோதாக்களில் கையெழுத்துப் போடாமல் சிக்கல்களை உருவாக்கிய போது, அம்மாநில அரசு வழக்குத் தொடர்ந்தது.
அதில், துணைநிலை ஆளுநரின் போக்கு தவறானது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. அமைச்சர்களும் முதலமைச்சரும் தான் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள். அவர்களின் பரிந்துரையின்படி தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது" தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தினை சேர்ந்த தியாகு சொல்கிறார்.












Click it and Unblock the Notifications