விவசாய கடன் 100% தள்ளுபடி.. விஜயின் மெகா அறிவிப்பில்.. இந்த முக்கிய விஷயத்தை கவனிச்சீங்களா
தமிழ்நாட்டில் உள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெரும் நிவாரணம் அளித்துள்ளார். விஜயின் பிரம்மாண்ட தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமானது விவசாயிகளுக்கான பயிர்கடன் தள்ளுபடி தான். இதை எப்படி விஜய் செய்யப்போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது சைலெண்டாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு இது பொருந்தாது என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தற்போது அறிவிப்பாக வந்துல்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை அமைச்சர் ர. விஜேந்தர், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி அமைச்சர் எஸ். மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடன் தள்ளுபடி விபரம்
கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால், குறு விவசாயிகளுக்கு முழு 100% தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும்.
இதேபோல் ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை இருந்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
இதுவே ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
அதிகப்படியாக ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும்.
சிறு விவசாயிகள்
சிறு விவசாயிகளுக்கு இதே கடன் அளவுகளில் 50% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது 50000 கடன் வாங்கியிருந்தால் அவர்களுக்கு 25000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
பெரு விவசாயிகள்
இதர பெரு விவசாயிகளுக்கும் சிறப்பு உதவி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதாவது பெரு விவசாயிகளுக்கு, கடன் தொகை எவ்வளவு இருந்தாலும் ரூ.5,000 மட்டும் தள்ளுபடி வழங்கப்படும்.
சிறு - குறு விவசாயிகளின் வித்தியாசம்
குறு விவசாயிகள் என்பது 1 ஹெக்டேர்-க்கு குறைவான நிலத்தில் விவசாயம் செய்வோர், சிறு விவசாயிகள் என்பது 1 - 2 ஹெக்டேர்-க்கு குறைவான நிலத்தில் விவசாயம் செய்வோர்.
இந்தத் தள்ளுபடி எதிர்வரும் சாகுபடி பருவத்தில் விவசாயிகள் மீண்டும் கடன் பெற உதவும். இதனால் அவர்கள் புதிய பயிர் சாகுபடிக்கு எளிதாக நிதி பெற முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
100% பயிர்க்கடன் தள்ளுபடி யாருக்கு?
தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் குறு விவசாயிகள் மட்டுமே 100% முழு கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள். இதற்கு, ரூ.50,000 வரை கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை பயிர்க்கடன் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.50,000 வரை கடன் பெற்ற தகுதியான குறு விவசாயிகளின் முழு கடன்தொகையும் தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000-க்கு மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, கடன் தொகையைப் பொறுத்து ரூ.40,000 அல்லது ரூ.30,000 வரை பகுதி தள்ளுபடி வழங்கப்படும்.
இந்தத் திட்டம் கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு மட்டும் பொருந்தும். தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு இது பொருந்தாது.
பலன்
விஜய் வெளியிட்ட அறிவிப்பின் கீழ் மொத்தம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காக அரசு ரூ.2,044.46 கோடி செலவிட உள்ளது. இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணமாகும். குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட இந்தத் திட்டம் உதவும்.












Click it and Unblock the Notifications