பெரிய மீனை இறக்கிய விஜய்.. லட்டு மாதிரி திமுகவிற்கு சாதகமான முடிவு.. ஸ்டன் ஆகி நின்ற தவெக!
சென்னை: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, காவல்துறை உயர் மட்டத்தில் மிக முக்கிய அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதில் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு விஷயம், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.அருண் ஐ.பி.எஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பதுதான்.
தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, இந்த அதிரடி மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் கால மோதலும் தற்போதைய நியமனமும்
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய சென்னை கமிஷனராக இருந்த ஏ.அருண் மீது த.வெ.க தரப்பில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் வாகனப் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரங்களிலும், தேர்தல் விதிமுறை மீறல் என த.வெ.க தலைவர் விஜய் மீது சென்னை போலீஸ் வழக்குப் பதிவு செய்தபோதும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. தேர்தல் ஆணையத்தின் தலையீட்டால் அருண் ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, 'கட்டாய காத்திருப்பு' பட்டியலில் வைக்கப்பட்டார்.
ஆனால், இப்போது அதே ஏ.அருண் ஐ.பி.எஸ் அதிகாரியை, முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு மிக முக்கியமான ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக (DVAC Head) நியமித்திருப்பதுதான் அரசியல் களத்தில் விவாதங்களை பற்றவைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் 'த.வெ.க' ஆதரவாளர் விவாதம்
இந்த நியமனம் வெளியான சில மணி நேரங்களிலேயே, த.வெ.க ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நெட்டிசன்கள் மத்தியில் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இணையத்தில் த.வெ.க தொண்டர்கள் மத்தியில் மூன்று விதமான கருத்துக்கள் பிரதானமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன:
தவறான முடிவு / திசைதிருப்பப்பட்டாரா விஜய்?
ஒரு தரப்பு ஆதரவாளர்கள், "தேர்தல் சமயத்தில் நம்மையே எதிர்த்த ஒரு அதிகாரியை, இவ்வளவு முக்கியமான லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைவராக்கியது தவறான முடிவு. விஜய்க்கு யாரோ தவறான ஆலோசனை வழங்கி, அவரை திசைதிருப்பியுள்ளனர்" என்று சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவர் ஒரு நேர்மையான அதிகாரி!
மறுபுறம், விஜய்யின் முடிவை ஆதரிக்கும் தொண்டர்கள், "அருண் ஐ.பி.எஸ் அவர்கள் சட்டம்-ஒழுங்கை கையாள்வதில் சமரசம் செய்யாத, கடமை தவறாத நேர்மையான அதிகாரி. முந்தைய ஆட்சியில் அவர் எடுத்த சில நடவடிக்கைகள் அரசியல் காரணங்களால் விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஊழலை ஒழிக்க இவரைப் போன்ற கண்டிப்பான அதிகாரிதான் விஜய்க்கு தேவை" என முட்டுக் கொடுத்து பேசி வருகின்றனர்.
தி.மு.க மீதான நடவடிக்கை சாத்தியமா?
மூன்றாவதாக எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி - முந்தைய தி.மு.க ஆட்சிக்கால முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பது பற்றியது. அருண் ஐ.பி.எஸ் கடந்த தி.மு.க ஆட்சியில் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் என்பதால், அவர் எப்படி முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்குகளை சுறுசுறுப்பாக கையாள்வார்? அவர் தி.மு.க-விற்கு நெருக்கமானவராகச் செயல்பட வாய்ப்புள்ளதே என்று ஒரு தரப்பினர் சந்தேகம் எழுப்புகின்றனர்.
பிற முக்கிய மாற்றங்கள்
இந்த அதிரடி உத்தரவில் அருண் நியமனம் மட்டுமின்றி, சட்டம்-ஒழுங்கு பிரிவிலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த மகேஸ்வர் தயாள் ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, சென்னை தலைமையகத்தின் ஏ.டி.ஜி.பி (நிர்வாகம்) பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சி.பி.சி.ஐ.டி பிரிவில் இருந்து கட்டாய காத்திருப்பில் இருந்த டி.எஸ்.அன்பு ஐ.பி.எஸ், புதிய சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு, சட்டம்-ஒழுங்கு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுகளில் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், த.வெ.க அரசின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications