கன்னாபின்னாவென உயர்வு.. பெட்ரோல் விலை அதிகமென சிஎன்ஜி கார் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இணையாக சிஎன்ஜி விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் அதிகளவில் சிஎன்ஜி வாகனங்களை வாங்க துவங்கியுள்ளனர். ஆனால் தற்போது ஹார்முஸ் பிரச்சனை காரணமாக பெட்ரோல், டீசலுக்கு இணையாக சிஎன்ஜி விலையும் உயரும் காரணத்தால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இன்று காலை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை போல் சிஎன்ஜி விலையையும் 4வது முறையாக உயர்த்தியுள்ளது. இதனால் எரிபொருள் செலவை குறைப்பதற்காக சிஎன்ஜி வாகனங்களை வாங்கிய அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

நாடு முழுவதும் இன்று ஒரு கிலோ சிஎன்ஜிக்கு ரூ.2 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த இரு வாரங்களுக்குள் நான்காவது முறை விலை உயர்வாகும். மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகள் அழுத்தத்தில் இருப்பதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அறிவித்துள்ள புதிய விலைப்படி, டெல்லியில் சிஎன்ஜி இப்போது ஒரு கிலோ ரூ.83.09க்கு விற்கப்படும். முன்பு இது ரூ.81.09 ஆக இருந்தது. தேசிய தலைநகர் பகுதியில் உள்ள நொய்டா, காசியாபாத் மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் விலை ரூ.91.70 ஆக உயர்ந்துள்ளது. குருகிராமில் ரூ.88.12க்கு விற்கப்படுகிறது. அஜ்மீரில் ரூ.92.44 ஆகவும், சென்னையில் ரூ.95 ஆகவும் சிஎன்ஜி விலை உயர்ந்துள்ளது.
இரு வாரங்களில் தொடர் விலை உயர்வுகள்
கடைசியாக மே 23-ம் தேதி ஐஜிஎல் சிஎன்ஜி விலையை ஒரு கிலோ ரூ.1 உயர்த்தியது. அப்போது அது பத்து நாட்களுக்குள் மூன்றாவது உயர்வாக இருந்தது, இன்றைய உயர்வின் மூலம் 4வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் நீண்டகாலமாக ஒரே விலையில் விற்கப்பட்ட சிஎன்ஜி விலை முடிவுக்கு வந்தது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலைகள் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2.61 உயர்த்தின. டீசல் விலை ரூ.2.71 உயர்ந்தது. இது இரு வாரங்களுக்குள் நான்காவது உயர்வு ஆகும். மே 15 முதல் இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒட்டுமொத்தமாக ரூ.7.5 வரை உயர்ந்துள்ளன.
ஏன் எரிபொருள் விலை உயர்கிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே இந்த தொடர் விலை உயர்வுகளுக்கு முக்கிய காரணம். மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் சப்ளை முடக்கங்கள் எரிபொருள் விநியோகத்தை பாதித்துள்ளன.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக பாதையான ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு அச்சம் காரணமாக இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இந்த செலவு அதிகரிப்பு மூலம் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க மத்திய அரசின் கீழ் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.














Click it and Unblock the Notifications