கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் சந்தேகம் வருது.. சிபிஐ விசாரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: கோவை சரக டிஐஜி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவையில் உள்ள வீட்டில் டிஐஜி விஜயகுமார் தமது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. காலையில் டிஐஜி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஐஜி தற்கொலை செய்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினை காரணம் இல்லை என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். இது தொடர்பாக டிஜிபி கூறும் போது, கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். விஜயகுமாருக்கு ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் கவுன்சிலிங் அளித்துள்ளார். டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு அலுவலக பிரச்சினையோ பணிச்சுமையோ காரணம் கிடையாது. ஐஜி சுதாகார் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்" என்று கூறினார்.
இந்த நிலையில், கோவை சரக டிஐஜி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications