ஜனாதிபதி மாளிகையில் ஊட்டி சாக்லேட்ஸ்! நேரில் சந்தித்து பரிசளித்த திமுக பிரமுகர்! பின்னணி என்ன?
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கோவை மாவட்ட திமுக பிரமுகர் விஷ்ணு பிரபு ஊட்டி சாக்லேட்ஸ்களை அவருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் பிரத்யேக முறையில் தயாரிக்கும் எம்பிராய்டரி சால்வை ஒன்றையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பரிசாக கொடுத்தார்.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட எந்தப் பொறுப்புகளிலும் இல்லாத ஒருவர், குடியரசுத் தலைவரை எவ்வாறு சந்தித்திருப்பார் என்ற கேள்வி பலருக்கும் எழும். ஆனால் அது தொடர்பான பின்னணி சற்று சுவாரஸ்யமானது.

என்ன பின்னணி?
கோவையை சேர்ந்த டாக்டர் விஷ்ணு பிரபு என்பவர் திமுக பிரமுகராக இருந்தாலும் கூட அடிப்படையில் இவர் ஒரு தொழிலதிபர். அந்த வகையில் அதில் கிடைத்த உயர்மட்ட தொடர்புகள் மூலம் பப்புவா நியூ கினியா நாட்டின், இந்தியாவுக்கான வர்த்தக ஆணையராக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டார். இதனால் பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார் விஷ்ணு பிரபு.

ஊட்டி சாக்லேட்ஸ்
இதில் குறிப்பிட வேண்டிய விஷேசம் என்னவென்றால் பப்புவா நியூ கினியாவை பொறுத்தவரை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பது தான். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்பின் போது குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.

நீலகிரி பாரம்பரியம்
இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க தோடர் சமுதாயத்தினர் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை ஒன்றும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 5 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.

குவியும் பார்வையாளர்கள்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காக, நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் முன் அனுமதி பெற்றதன் அடிப்படையில் தினமும் ஜனாதிபதி மாளிகையில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications