"விபத்துகளின் தலைநகராக மாறும் கோவை.." சென்னையை விட ரொம்பவே மோசம்.. உச்சத்தில் சாலை விபத்துகள்! பகீர்
சென்னை: தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் பதிவான மாவட்டங்களில் சென்னையைக் காட்டிலும் கோவையில் அதிகம் பதிவாகியுள்ளது. இது கோவை சாலை விபத்துகளின் தலைநகராக மாறியுள்ளதைக் காட்டுகிறது.
மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்கச் சாலைகள் நெரிசல் மிக்க ஒன்றாக மாறி வருகிறது. இதனால் பல நேரங்களில் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகிறது. விபத்துகளைத் தடுத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவே போக்குவரத்து விதிகள் இருக்கிறது.

ஆனால், பொதுமக்கள் சிலர் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. இது விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகள் குறித்த முக்கிய தகவல்கள் இப்போது வெலியாகியுள்ளது.
அதிக விபத்துகள் கோவை: அதில் தமிழகத்தின் சாலை விபத்துகளின் தலைநகராக இப்போது கோவை மாறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் கோவையில் விபத்துகளால் 1,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த காலங்களில் விபத்துகள் எண்ணிக்கையில் தலைநகர் சென்னை தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது 15ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.
கோவை உடன் ஒப்பிடும் போது சென்னையில் உயிரிழப்புகள் 50% கீழ் தான் (500 உயிரிழப்புகள்) பதிவாகியுள்ளது. இரு மாவட்டங்களிலும் விபத்துகள் எண்ணிக்கை சமமாக இருந்தாலும் கூட அரசு அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளைக் கடுமையாக அமல்படுத்தியதன் காரணமாகச் சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.
என்ன காரணம்: இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "கோவையைப் பொறுத்தவரை அங்கே இரண்டே இரண்டு அரசு பொது மருத்துவமனைகள் (கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ) மட்டுமே உள்ளன.. எனவே விபத்து காலங்களில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இந்த இரண்டு மருத்துவமனைகளில் ஒன்றுக்குத் தான் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால், சென்னையில் நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், புறநகர்ப் பகுதிகளில் தனியாக அவசர சிகிச்சை மையங்களும் உள்ளன" என்கிறார்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் 4 அவசர சிகிச்சை மையங்கள் உள்ளன.. விபத்தில் சிக்கி அனுமதிக்கப்பட்ட 92% நோயாளிகள் இந்த அவசர சிகிச்சை மையங்கள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேநேரம் கோவையின் புறநகர்ப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் அங்கே அவசர சிகிச்சைக்குத் தனியாக எந்தவொரு மையமும் இல்லை. இதன் காரணமாகவே கோவை நகர்ப்புறத்துடன் ஒப்பிடும் போது புறநகர்ப் பகுதிகளில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது.
விதிகள்: மேலும், கோவை உடன் ஒப்பிடுகையில் சென்னையில் போக்குவரத்து விதிகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது தினமும் சராசரியாக 180-200 வழக்குகளைப் பதிவு செய்யப்படுகிறது. இந்த கடுமையான நடவடிக்கையால் ஹெல்மெட் அணிவோர் விகிதம் சென்னையில் 80%ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாததால் 45 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கோவையில் ஹெல்மெட் அணியாததால் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சென்னையில் தானியங்கி முறையில் நம்பர் பிளேட்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபராதம் விதிக்கும் ஏ.என்.பி.ஆர் கேமராக்களும் உள்ளன. இப்போது நகரில் மொத்தம் 77 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் இருக்கும் நிலையில், விபத்து நடக்கும் இடங்களில் கூடுதலாக ஏ.என்.பி.ஆர் கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications