அமைச்சர் சேகர்பாபு Vs பரந்தாமன் எம்.எல்.ஏ.! முற்றிய பனிப்போர்! தர்ம சங்கடத்தில் திமுக தலைமை!
சென்னை: அமைச்சர் சேகர்பாபுவுக்கும் எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் எம்.எல்.ஏ.வுக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இதுவரை இலை மறை காயாக இருந்து வந்த அவர்களுக்கு இடையேயான சண்டை இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கக் கூடிய அமைச்சர்களில் சேகர் பாபுவும் ஒருவர். முதலமைச்சருடன் நினைத்த நேரத்தில் பேசும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர். அதே போல் எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனுக்கும் முதல்வர் வட்டாரத்தில் நற்பெயர் இருக்கிறது. ஊடக விவாதங்களில் கட்சிக்காக பேசுவதாக இருக்கட்டும், சட்ட விவகாரங்களை கவனித்துக் கொள்வதாக இருக்கட்டும் இவரும் முதல்வரின் குட்புக்கில் தான் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முதல் லடாய் நடந்து வருகிறது. அமைச்சர் சேகர்பாபு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பரந்தாமனுக்கு அழைப்பு விடுப்பதில்லை. பதிலுக்கு பரந்தாமன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சேகர்பாபுவுக்கு அழைப்பு இருப்பதில்லை. இப்படியாக இவர்களுக்கு இடையேயாய மோதல் நடந்து வந்த நிலையில், அலுவலகத்தை காலி செய்யும் அளவுக்கு அது முற்றிவிட்டது.
எழும்பூரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தனது அலுவலகத்தை காலி செய்துக்கொண்டு இப்போது சேத்துப்பட்டு பகுதிக்கு ஷிப்ட் ஆகி சென்றுவிட்டார் பரந்தாமன் எம்.எல்.ஏ. இது குறித்து விசாரித்ததில் பரந்தாமனுக்கு வாடகைக்கு அலுவலகம் விட்டிருந்த நபர் மூலம் அமைச்சர் தரப்பு குடைச்சல் கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இருவருமே வேண்டப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது திமுக தலைமை.












Click it and Unblock the Notifications